;

பாடல்கள்

Tuesday, September 22, 2009

ஈழ தாயின் அழுகுரல் கேட்கிறதா? ஏக்கம் புரிகிறதா?

ஈழப்போர், இறுதிப்போர், தீக்கோளங்கள் கொட்டித்தீர்த்தன. வானமே பிழந்து தீக்குண்டுகளும் வெடிமுழக்கங்களும் வன்னிமண்னை துவசம் செய்துகொண்டிருந்த நேரமது. அப்பாவி மக்களும் போராளிகளும் என்ன செய்வதென்னு புரியாமல் பின்வாங்கி பின்வாங்கி மிகக் குறுகிய ராணுவ வளையத்துள் மாட்டிக்கொண்டோம். சுரணடைந்தவர்களும் தப்பி ஓடியவர்களும் ராணுவத்தால் மனித வேட்டை நடாத்தப்பட்டுக்கொண்டிருந்தது. எங்கும் மரண ஓலம்! எங்கும் தமிழர் பிணங்கள். ஊழிகாலம் என்பார்களே அதுதான், அதேதான். ஈழத் தமிழர்களின் ஊழிகாலம். துமிழன் இரத்தமும் சதையும் வன்னிமண்ணில் சிதறிக்கிடந்தன. எத்தனையோ போர்க்கழத்தைப் படித்திரு;கலாம், பார்த்திருக்கலாம் ஆனால் இந்தக் கொடிய காட்சியை ஈழத் தமிழரைவிட யாரும் பார்த்திருக்க முடியாது.

போர் முடிந்தது. ஆனால் வேட்டுக்களின் சத்தம் ஓய்ந்தபாடில்லை. குடும்பங்கள் பிரிந்தன. உறவுகள் பிரிந்தன. எல்லோரும் தனித்தனியாய் தவித்து நின்றோம். என் கணவர் எங்கே தெரியாது, என் ஐந்து பிள்ளைகளில் மீதமுள்ள இரண்டு பிள்ளைகளைக் காணவில்லை. அவர்களை தேடிப்பார்க்கும் சூழ்நிலையும் அங்கு இல்லை. அவரவர் உயிரை அவரவர் காப்பதே கடமையாக்கப்பட்டுவிட்டது. ஆங்காங்கே கேட்கும் வேட்டுக்களுக்கு விளக்கங்கள் வெளியாகிக்கொண்டிருந்தது. ராணுவம் போராளிகள் என்று சந்தேகப்படுபவர்களை கூட்டம் கூட்டமாக அழைத்துச் சென்று சுட்டுத் தள்ளுகிறார்கள் என்ற செய்தி கேட்டு என் தலையில் இடி விழுந்தது போலானேன்.

ஏற்கனவே, போராளிகளாக மூன்று பிள்ளைகளைப் பறிகொடுத்து நிற்கும் எனக்கு அப்பாவிகளான மீதிப் பிள்ளைகளையும் பறிகொடுப்பதென்றால் எந்தத் தாயால் தாங்கிக்கொள்ள முடியும். ஆனாலும் ஒரு நப்பாசை, என் பிள்ளைகள் எங்கோ உயிருடன் இருக்கமாட்டார்களா என்று. ஆனாலும் அந்த ஆசையிலம் மண் விழுந்தது. கண்டேன் கண்டேன் அந்த ராணுவக் காடையன் என் பிள்ளைகளை அம்மணமாக்கி, கைகளை பிணைத்து, கண்களை கட்டி, குப்புறத் தள்ளி துப்பாக்கிக் குண்டுகளால் தலையை சிதறப்பண்ணி அதில் கொப்பளித்த இரத்தத்தால் எம் மண்ணே சென்னிற சேறான கொடுமையைக் கண்டேனடா. நெஞ்சு பதைத்தது, என் கருவறையே கலங்கி துடித்ததடா. நான் மட்டுமல்ல என்னைப்போல் எத்தனையோ தாய் தந்தையர் அழுது புலம்பித் தவித்தனர். என் அருகே இன்னொரு தாய் அழுகுரல்,

காவோலை நானிருக்க

குருத்தோலை சாய்ந்ததென்ன – எனக்கு

கொள்ளி போட நீயிருந்தாய் - உன்

தலையில் கொடு நெருப்பை கொட்டினரோ

அம்மா என அழைப்பாய் - ஏன்

உச்சி எல்லாம் குளிருமடா – நீ

ஊமையாய் போனாலும் மனமாறிப்போகுமடா

பிணமாய் போனாயே – உன்னை

என்ன சொல்லி நானாற

ஆண்டவன் தான் படைத்ததென்றால்

தமிழனுக்கு ஆண்டவனும் எதிரியடா

இப்போ அவனிடம் கை ஏந்த

எனக்கு தேவை ஏதும் இல்லையடா

ஒன்றுமட்டும் கேட்கலாம்

என்னையும் கொன்றுவிடு அதுபோதும்.

இப்படி ஆயிரமாயிரம் அழுகுரல். இப்படி ஒரு கொடூரம் எந்த மக்களுக்கும் எந்த நாட்டிலும் ஏற்பட்டுவிடக் கூடாது.

மிருகவதைக்கு எதிராக எத்தனை எத்தனைச் சட்டங்கள் சமூகசேவை நிறுவனங்கள் கருணை கொண்ட ஆர்வலர்கள் என உலகம் முழுவதும் உள்ள போது, ஈழத்தில் நடந்தேறும் மனித வதைகளை கண்டுகொள்ளாமல் பத்திரிகை அறிக்கையோடு கடமை முடிந்தது என நினைப்பவர்களை பார்க்கும் போது தான் வேதனையாக இருந்தது.

ஈழத்தில் தமிழன் உள்ளவரை சிறிலங்கா அரசு ஓயாது. தமிழன் ஒட்டுமொத்தமாக அழிந்தாலே ஒழிய இப்படி இன அழிப்பு தொடரும் என்பதில் யாருக்கும் ஐயப்பாடில்லை. அப்படியானால் இதற்கு தீர்வு தான் என்ன? உண்டு!

ஈழத் தமிழனே!

இனியாவது ஒன்றுபட மாட்டாயா? ஓரணியாய் திரளாயா. நீ ஒன்று சேர்ந்து ஆயுதத்தை கையிலெடு என்று சொல்லவில்லை. ஒன்றாய் சேர்ந்து சிந்தி, நிச்சயம் வழிபிறக்கும். எமது ஆரம்பம் முதல் இன்றுவரை கிடைத்த வாய்ப்புக்களை நீ கை நழுவ விட்டுவிட்டாய். அதன் விளைவதான் இப்போதைய இழிவும் அழிவும். இனியும் காலம் கடத்தி மீதித் தமிழனையும் காவுகொடுக்க காரணமாகிவிடாதே. என் மகன்களை என் மக்களை கொன்று குவித்தவனிடமே ஒரு நேர சோற்றுக்காக இந்த முட்கம்பி வேலிக்கிடையே கை ஏந்தி நிற்கிறேனடா. சுதந்திரம் கேட்டு போராடிய பிள் ளைகளை பெற்ற நான் ஒரு நேர வயிற்றுச் சோற்றுக்கு கையேந்தி அடிமையாக நிற்கிறேனடா! என்னைக் காப்பாற்று, எம் இனத்தைக் காப்பாற்று. நிம்மதியாக வாழ ஏதாவது வழியை தேடு. நீ ஆயுதத்தைக் கையாள தெரிந்த அளவுக்கு அரசியலை கையாளத் தெரிந்துகொள்ளவில்லையே. இன்றைய தோல்விக்கு இதுதான் மூலகாரணம்.

ஆயுதம்:- இது உன்னிடம் பலமாக உள்ளவரை நீயே ராஜா, நீயே மந்திரி, நீயே எல்லாமும். இது ஆயுததாரிகளுக்கு ஏற்படும் பலவீன மான பலம். ஏனென்றால் உன்னிடம் உள்ள பலமான ஆயுதத்தை விடவும் பலமிக்க ஆயுதம் எதிரியிடம் சென்றுவிட்டால், அவன் பலசாலியாகிவிடுவான் நீ அடிமையாக்கப்பட்டுவிடுவாய் என்பதை நீ ஏன் உணர மறுத்தாய். நீ ஆயுதத்தில் பலமாக உள்ளபோதே அரசியல் தீர்வுக்கான வழிமுறைகளை முன்னெடுக்காததே இன்றைய அவலத்திற்கு உண்மையான காரணம்.

யுத்தத்தை நிறுத்துவதற்காக பேச்சுவார்த்தையில் ஈடுபட்டபோதே தீர்வுக்கான முன்னெடுப்புகளை நீ முன்னெடுக்கத் தவறிவிட்டாய். உன் சகோதரர்களையும் அயலவர்களையும் உனக்கு எதிரியாக்கிக்கொண்டதும் அல்லாமல் அவர்களை எதிரிக்கு நண்பர்களாக்கிவிட்டது உனது அபரிமிதமான ஆயுத நம்பிக்கை.

முடிந்தவை முடிந்தவையாக இருக்கட்டும் இனி நடப்பவையாவது நல்லவையாக தொடர சிந்தித்து செயல்படு. முதலில் ஈழத்தமிழனே ஒன்றுபடு! தோழ் கொடுக்கும் தோழனாய் உணர்வோடு ஒன்றுபட்டு சிந்தித்து செயல்படு வெற்றி கிட்டும். தோழ் கொடுக்க தோழர்கள் உண்டு தளர்ந்துவிடாதே, ஆதரவு தர இரத்த உறவு, அயலவர்கள் உண்டு! எழுந்து நில் உன்னால் முடியும் ஈழத் தமிழனே உன்னால் முடியும்.

எம் தாய் தமிழ் நாடே!

எமக்கொரு துன்பம் என்றால் உண்மையான உணர்வோடும் துடிப்போடும் களமிறங்கிப் போராடும் எம் இரத்த உறவுகளே, ஈழத் தமிழன் நிம்மதி பெருமூச்சு விட முடியும் என்றால், அதற்கு பெரும் பங்கு உங்களிடம்தான் உள்ளது. உங்களை நம்பித்தான் உலகத் தமிழர்கள் எல்லாம் ஏக்கப்பார்வையோடு காத்திருக்கின்றனர். உங்களுக்கு அறிவு கூறும் அளவுக்கு நான் அரசியல் அறிவு உள்ளவள் அல்ல. மனதிலுள்ள ஏக்கத்தின் வெளிப்பாடாகவே இதை கூறுகிறேன். எம் இளைஞர்களின் இந்த நிலைக்கு காரணம் சகோதரப்படுகொலை என்பதை யாரும் புறம் தள்ளிவிட முடியாது. அதேபோல் மிகுந் த அரசியல் சாணக்கியமும் உண்மையான உணர்வும் கொண்ட தமிழ்நாட்டின் தலைவர்கள் இருந்தும் ஈழத்தில் நடந்து முடிந்த பேரழிவையும் நடந்துகொண்டிருக்கும் தமிழர் அழிப்புகளையும் தடுக்க முடியவில்லையென்றால் அதற்கு உண்மையான காரணம், தாங்கள் ஒன்றுபடாமல் தனித் தனி க் கட் சிகளாக போராட்டம் நடாத்தியதே.

தமிழரைக் காக்க தமிழன் என்கிற ஒரு குடையின் கீழ் ஒன்றுபட்டு போராடாததே மத்திய அரசு செவிசாய்க்காததற்கு காரணம். நாம் வாழ்வில் ஒரு காலும் சாவில் ஒரு காலுமாக பேதலித்து நிற்கிறோம். எம்மைக் காப்பாற்றி வாழவைப்பீர்கள் என்று இன்னமும் முழுமனதுடன் நம்புகிறோம். மரணத்தறுவாயிலும் உங்கள் கைகள் உயராதா ஒன்றுபட்டு உயராதா என்கிற ஏக்கத்தோடு பார்த்துக் காத்துநிற்கிறோம். தங்களின் மேலான அரசியல் கொள்கைகளை ஒருபுறம் ஒதுக்கிவைத்துவிட்டு, ஈழத் தமிழர்களைக் காக்க தா ங்கள் மேற்கொள்ளும் பெரும் அற்பணிப்பாக அரசியல் வேறுபாடுகளை ஒதுக்கிவைத்துவிட்டு ஒன்றுபட்டு எம்மை காக்க வழிசெய்யுங்கள். உங்களால் முடியும். உங்களால் மட்டும்தான் ஈழத்தமிழனுக்கு விடிவு பிறக்கும் என்ற நம்பிக்கையோடு காத்திருக்கும் ஈழத் தாய்.

No comments: