;

பாடல்கள்

Monday, December 28, 2009

திருவள்ளுவராண்டு 2041 (ஆங்கிலம் 2010) தமிழ் நாள்காட்டி



இன்னும் சில நாட்களில் 2010 புத்தாண்டு பிறக்கவுள்ளது. இது ஆங்கிலப் புத்தாண்டு; உலகமே பின்பற்றும் பொதுவான ஆண்டு என்பது எல்லாரும் அறிந்தது. 2010 சனவரித் திங்கள் 14ஆம் நாளில் தமிழர்களின் புத்தாண்டு பிறக்கவுள்ளது. இது திருவள்ளுவராண்டு 2041 ஆகும்.

ஆங்கிலத்தையும் ஆங்கிலப் புத்தாண்டையும் முன்படுத்தி நாள்காட்டிகள் வெளியிடப்படுகின்ற மரபைப் போல, தமிழையும் தமிழ்ப் புத்தாண்டையும் முன்னிறுத்தி தமிழ் நாள்காட்டி வெளிவந்துள்ளது. அதுவும், மலேசியா திருநாட்டில் நான்காவது ஆண்டாக இந்தத் தமிழ் நாள்காட்டி வெற்றிக்கொடிகட்டி வெளிவருகின்றது.

ஏற்கனவே, 2007, 2008, 2009 ஆகிய மூன்று ஆண்டுகளில் தொடர்ந்து வெளிவந்து தமிழர்களின் பாராட்டுகளை மட்டுமின்றி, மக்கள் தொலைக்காட்சியின் வாழ்த்தையும் பெற்ற இந்த நாள்காட்டியைத் தமிழியல் ஆய்வுக் களம் பெருமையோடு வெளியிட்டுள்ளது. மலேசியத் தமிழறிஞர் இர.திருச்செல்வம் இந்த நாள்காட்டியை வடிவமைப்புச் செய்துள்ளார்.

தமிழ் நாள்காட்டி வரலாற்றில் தனிப்பெரும் சிறப்பாக இதுகாறும் கண்டிராத மாபெரும் முயற்சியாக, இந்த நாள்காட்டி முழுமையாகத் தமிழிலேயே வெளிவந்துள்ளது. தமிழ்க்கூறு நல்லுலகம் முதன்முறையாகக் கண்டிருக்கும் தனித்தமிழ் நாள்காட்டி என இதனைத் துணிந்து குறிப்பிடலாம்.


நாள்காட்டிகளில் வழக்கமாக இடம்பெறுகின்ற அனைத்து விவரங்களும் இந்தத் தமிழ் நாள்காட்டியிலும் இடம்பெற்றுள்ளன. மலேசியச் சூழலுக்கு ஏற்ற வகையில், பொது விடுமுறைகள், பள்ளி விடுமுறைகள், சிறப்பு நாள்கள் என அனைத்தும் இடம்பெற்றுள்ளன.

தமிழ்ப் புத்தாண்டாம் தை முதல் நாளில் தொடங்குகிற இந்த நாள்காட்டியில் ஆங்கில நாள்காட்டியும் உள்ளடங்கி இருக்கிறது. ஆங்கில மாதம், நாள் ஆகியன குறிக்கப்பட்டுள்ளன. அதே வேளையில், தமிழுக்கும் முன்னுரிமை கொடுத்து நாள், மாதம், திதி, இராசி, நட்சத்திரம் என எல்லாமும் (தனித்)தமிழில் குறிக்கப்பட்டுள்ளன.

தமிழர்கள் கண்ட தமிழ் எண்கள் அழகாக வடிவமைக்கப்பட்டு இந்த நாள்காட்டியில் பயன்படுத்தப்பட்டுள்ளது. தமிழ் எண்களை அறியாதவர்களுக்கு உதவியாக தமிழ் எண்களுக்கு நடுப்பகுதியில் ஆங்கில எண்ணும் குறிக்கப்பட்டுள்ளது.

தமிழ் நாள்காட்டியின் உள்ளடக்கங்கள்:-

1)தேதியைக் குறிக்கும் எண்கள் தமிழ் எண்களாக உள்ளன.

2)திருவள்ளுவர் ஆண்டைப் பின்பற்றி மாதங்கள், கிழமைகள், நாட்கள் என அனைத்தும் தமிழ்ப்பெயர்களோடு அமைந்துள்ளன.

3)கிழமைகள் 7, ஓரைகள் 12 (இராசி), நாள்மீன்கள் 27 (நட்சத்திரம்), பிறைநாள்கள் 15 (திதி) முதலானவை தமிழில் குறிக்கப்பட்டுள்ளன.

4)50க்கும் மேற்பட்ட தமிழ்ச் சான்றோர்கள், அறிஞர்கள், தலைவர்கள் ஆகியோரின் பிறந்த நாள், நினைவு நாள்களோடு தமிழ் அருளாளர்களின் குருபூசை நாட்களும் குறிக்கப்பட்டுள்ளன.

5)மலேசியா, தமிழகம், தமிழீழம் உள்ளிட்ட 30 தமிழ்ப் பெரியோர்கள் - சான்றோர்கள் - தலைவர்களின் உருவப்படங்கள் இடம்பெற்றுள்ளன.

6)தமிழர்களின் வரலாற்றில் மறைக்கப்பட்டு; மறக்கப்பட்டுவிட்ட வானியல்(சோதிடக்) கலையை இந்த நாள்காட்டி சுருக்கமாக வெளிப்படுத்தி காட்டியுள்ளது.

7)குழந்தைகளுக்குப் பெயர் சூட்டுவதற்கான எழுத்து அட்டவணை நாள்காட்டியில் பின்னிணைப்பாக வழங்கப்பட்டுள்ளது. *(கிரந்த எழுத்துகள் அறவே கலவாமல் முழுமையாகத் தமிழ் எழுத்துகளையே கொண்டிருக்கும் பெயர் எழுத்து அட்டவணை இதுவாகும்.)

8)ஐந்திரக் குறிப்பு, நாள்காட்டிப் பயன்படுத்தும் முறை, பிறைநாள்(திதி), ஓரை(இராசி), நாள்மீன்(நட்சத்திரம்) பற்றிய விளக்கங்கள் ஆகியவை இரண்டு பக்கங்களில் நாள்காட்டியின் பின்னிணைப்பாக இடம்பெற்றுள்ளன.

9)ஒவ்வொரு ஓரை(இராசி) பற்றிய படத்தோடு அதற்குரிய வேர்ச்சொல் விளக்கமும் மிகச் சுருக்கமாகக் கொடுக்கப்பட்டுள்ளது.

10)தமிழின வாழ்வியல் மூலவர்களான வள்ளுவர் வள்ளலார் ஆகிய இருவரின் உருவப்படத்தை முகப்பாகத் தாங்கி, முழு வண்ணத்தில் தரமாகவும் தமிழ் உள்ளங்களைக் கவரும் வகையிலும் இந்நாள்காட்டி அமைந்திருக்கிறது.


உள்ளத்தில் தமிழ் உணர்வும் ஊக்கமும் கொண்டு தமிழ்நலத்திற்காக மு‎ன்னின்று செயலாற்றும் தமிழ் அன்பர்களும் ஆர்வலர்களும் இந்த நாள்காட்டியை வாங்கி ஆதரவு நல்குவதோடு பரப்பும் முயற்சியிலும் துணைநிற்கலாம். எந்த ஒரு வணிக நோக்கமும் இல்லாமல் முழுக்க முழுக்க தமிழ் வளர்ச்சியை மட்டுமே இலக்காகக் கொண்டு வெளிடப்பட்டுள்ள இந்த நாள்காட்டி ஒவ்வொரு தமிழர் இல்லத்திலும் இருக்க வேண்டும்.


இது நாள்காட்டி மட்டுமல்ல; தமிழ் எண்ணியல், வானியலை மீளக்கட்டிடும் ஆவணம். தமிழர் அனைவரும் தமிழில் பெயர்ச்சூட்டிக் கொள்ள உதவும் குட்டி ஐந்திறம்(பஞ்சாங்கம்). தமிழில் இருந்து காணாமற்போன கிழமை, திங்கள், திதி, இராசி, நட்சத்திரப் பெயர்களை மீட்டுக்கொடுக்கும் சுவடி. மொத்தத்தில், தமிழர் தமிழராக தமிழோடு தமிழ்வாழ்வு வாழ வழியமைத்துக் கொடுக்கும் வாழ்க்கைத் துணைநலம்.


தொடர்புக்கும் மேல் விளக்கத்திற்கும்:-
தமிழியல் ஆய்வுக் களம் – Persatuan Pengajian Kesusasteraan Tamil
No.17, Lorong Merbah 2, Taman Merbah,
14300 Nibong Tebal, SPS, Pulau Pinang. Malaysia

கைப்பேசி:- ம.தமிழ்ச்செல்வன் (6013-4392016)

ரிஞ்சிங் தமிழ்ப்பள்ளி முன்னாள் மாணவர் சந்திப்பு


Friday, December 04, 2009

தமிழும் இலக்கியமும் காக்கப்பட்டன; வாழ்க தமிழ்!




2010 தொடங்கி மலேசியக் கல்விச் சான்றிதல் எனப்படும் எசுபிஎம் (SPM) தேர்வில் 10 படங்களை மட்டுமே எடுக்க முடியும் என்ற கல்வி அமைச்சின் முடிவு அகற்றப்படுகிறது. 10 பாடங்களுக்குப் பதிலாகப் 12 பாடங்களை எடுக்க அமைச்சரவை இன்று இசைவு(அனுமதி) வழங்கியுள்ளது. மலேசியாஇன்று இணையத்தளம் இந்தச் செய்தியை உறுதிபடுத்தியுள்ளது.

இந்த விடயம் தொடர்பில் தமிழ், தமிழர் சார்ந்த பொது அமைப்புகள், அரசியல் கட்சிகள், சமய இயக்கங்கள், தமிழ் நாளேடுகள், தனியாட்கள் என அனைத்து தரப்பினரும் ஒரே நோக்கத்தில் ஒரே குரலில் தமிழ்மொழிக்காகப் பெரிய எழுச்சியோடு போராடினர் என்பதை நாடே அறிந்துள்ளது.

ஒட்டுமொத்த மலேசியத் தமிழர்களுக்குக் கிடைத்துள்ள மாபெரும் வெற்றியாக இதனைக் கருதலாம். தமிழ்மொழிக்கு வாழ்வா? சாவா? என்ற கடுமையான நெருக்கடியிலிருந்து தமிழையும் தமிழ் இலக்கியத்தையும் மீட்டெடுத்திருக்கும் மலேசியத் தமிழர்கள் இப்போது மிகுந்த மகிழ்ச்சியில் இருகின்றனர்.

இன்று மலேசியத் தமிழர்தம் போராட்டத்தின் வழி அடைந்திருக்கும் இந்த வெற்றிக்குப் பொருத்தமாக மலேசியப் பாவலர் ஒருவர் அன்றே பாடி வைத்திருக்கிறார் இப்படி:-

அவனவன் வாயா லன்றிப்
பிறனெவன் உண்ண வல்லான்
அவனவன் கண்ணா லன்றிப்
பிறனெவன் காண வல்லான்
அவனவன் செவியா லன்றிப்
பிறனெவன் கேட்க வல்லான்
அவனவன் மொழியினத்தைப்
பிறனெவன் காப்பான் வந்தே!
-(தமிழ்நெறி ஞாயிறு பாவலர் அ.பு.திருமாலனார்)
ஊர்கூடி தேர் இழுத்ததால் இழுத்ததால்தான் இந்த வெற்றி. ஒருமனதாக அனைவரும் போராடியாதால்தான் இந்த மாற்றம். ஒற்றுபட்டு நின்று குரல்கொடுத்ததால்தான் தமிழும் தமிழ் இலக்கியமும் மீட்கப்பட்டன – காக்கப்பட்டன - மலேசியத் தமிழரின் வாழ்வுரிமை நிலைநிறுத்தப்பட்டது.

இனிவரும் காலங்களிலும் நமது மொழியின உரிமைகளைக் காப்பதற்குத்..
தமிழா ஒன்றுபடு..
தமிழால் ஒன்றுபடு..
தமிழுக்காக ஒன்றுபடு..
தமிழருக்காக ஒன்றுபடு..

இதுதொடர்பான மலேசியாஇன்று செய்தியைப் படிக்க இங்கே சொடுக்கவும்.

Monday, November 23, 2009

உலக அப்பாக்களுக்குத் தமிழே தாய்

தற்குமுன் எழுதிய ‘இந்தியாவின் பழமையான மொழி சமற்கிருதம்’ என்ற தலைப்பிலான இடுகையில் ஒரு செய்தி இடம்பெற்று இருந்தது. அதாவது, தமிழே உலகத்தின் மூத்த மொழி - முதல் மொழி. அதற்கு சில அடிப்படை சான்றுகள் பட்டியலிடப்பட்டிருந்தன. அதில்,

//8.தாய் தந்தையரைக் குறிக்கும் தமிழ் முறைப்பெயர்கள், ஏறத்தாழ எல்லா மொழிகளிலும் திரிந்தும் திரியாதும் வழங்கி வருதல்.// என ஒரு சான்று இருந்தது. இதனை விரிவாக இந்த இடுகையில் காண்போமா?


‘அப்பா’ என்ற தமிழ்ச்சொல் இன்று உலகித்தின் பல மொழிகளில் நேரடியாகவும் – மருவியும் – திரிந்தும் – சிதைந்தும் வழங்கிவருகின்றது என்ற செய்தி வியப்பிற்குரிய ஒன்று. தமிழ்மொழியின் தொன்மைக்கும் – முதன்மைக்கும் – தாய்மைக்கும் – தலைமைக்கும் இதுவொரு மிகச் சிறந்த சான்றாதாரம் அல்லவா?

உலகத்தின் மூத்த மொழியாகவும் முதல் மொழியாகவும் இருப்பதற்கு தமிழுக்கு இருக்கும் தகுதியை நிறுவுதற்கு இதுவொன்றே போதுமல்லவா?

சரி வாருங்கள், ‘அப்பா’ என்கிற தமிழ்ச் சொல் உலக மொழிகளில் எப்படியெல்லாம் மாறியிருக்கிறது – மருவியிருகிறது என்று பார்ப்போம்.

தமிழ்:- அப்பன் // மலையாளம்:- அப்பன் // கன்னடம்:- அப்ப // துளு:- அப்ப // குடகு:- அப்பெ // கோண்டி:- ஆப்போ // துளு:- அப்பெ(தாய்) //

மராத்தி:- பாப் // குசராத்தி:- பாப் // இந்தி:- பாப் // வங்கம்:- பாப், பாபா //

மெச்சு:- அப்ப // போர்த்துக்கீசியம்:- அப // சிங்களம்:- அப்பா

எகிப்து:- ஆப் // அரபி:- ஆப் // கலதேயம்(Chaldean):- அப்பா // சீரியம்(Syriac):- ஆபோ // அரமிக்கு(Aramic):- அப்பா // அபிசினியம்:- ஆப்பாத்

இலத்தின்:- பப்பா // பிராகுவீ:- பப்பா // ஆங்கிலம்:- பப்பா

ஓசித்தியம்(Ostiak):- ஊப், ஓப் // பின்னியம்(Finnish):- அப்பி // அங்கேரியம்:- இப், இப்ப, அப்பொஸ்

அப்பாவுக்கு தமப்பன், தகப்பன், அத்தன் என்றும் தமிழில் சொற்கள் உள்ளன. இவை எவ்வாறு பிற மொழிகளில் திரிந்துள்ளன என இனி காண்போம்.

தமிழ்:- தம்+அப்பன்= தமப்பன்= தகப்பன்.

தமிழ்:- அத்தன். // பிராகிருதம்:- அத்தா

துருக்கி:- அத்த // அங்கேரியம்:- அத்ய // பின்னியம்(Finnish):- ஆத்த // செர்மியம்(Chermiss):- ஆத்யா // மார்தூவின்:- அத்தை // ஓசித்தியம்(Ostiak):- அத்த // இலாப்பியம்(Lappish):- அத்ஜெ(பாட்டன்)

கோதியம்(Gothic):- அத்தன் // இலத்தின்:- அத்த // கிரேக்கம்:- அத்த

அத்தன் என்பதைப் போலவே அச்சன் என்பதும் தமிழ் சொல்தான். இந்த ‘அச்சன்’ இன்று மலையாளத்தில் அப்படியே இருக்கிறது. அச்சன் என்ற சொல் மற்ற தென்னிந்திய மொழிகளில் எப்படி மாறியிருக்கிறது பாருங்கள்.

தமிழ்:- அத்தன்= அச்சன் // மலையாளம்:- அச்சன்

கன்னடம்:- அஜ்ஜ(பாட்டன்) // துளு:- அஜ்ஜெ(பாட்டன்) // குடகு- அஜ்ஜெ(பாட்டன்) // குருக்கு:- அஜ்ஜொஸ்(பாட்டன்) // பிராகிருதம்:- அஜ்ஜ // மராத்தி:- ஆஜா(பாட்டன்) // இந்தி:- ஆஜா(பாட்டன்)

இலாப்பியம்(Lappish):- ஐஜ. அத்ஜ(பாட்டன்)

அப்பாவை ஐயன் என அழைக்கும் பழக்கமும் தமிழருடையதே. ஐயன் என்பது அப்பாவை மட்டுமல்லாது தமையன், பெரியோன், ஆசிரியன், குரு, முனிவன் என பல பொருளையும் குறிக்கிறது.

தமிழ்:- ஐயன் // மலையாளம்:- அய்யன் // கன்னடம்:- அய்ய // தெலுங்கு:- அய்ய, அய // துளு:- அய்யெ(ஆசிரியன்) // குடகு:- அய்யெ(தந்தையுடன் பிறந்தான்) // துடவம்:- இன், எயி // கோலாமி:- அய்யா(பாட்டன்), பஅய்ய

போர்த்துக்கீசியம்:- ஐயோ(ஆசிரியன்)

தமிழ்:- தந்தை // கன்னடம்:- தந்தெ // தெலுங்கு:- தண்ட்ரி

இப்படியாக, அப்பாவைக் குறிக்கும் தமிழ்ச் சொற்கள் உலக மொழிகள் பலவற்றிலும் அப்படியே இருக்கிறது அல்லது ஓரளவு மாற்றமடைந்து காணப்படுகிறது. இதிலிருந்து தமிழ்மொழி உலக மொழிகளுக்கெல்லாம் சொற்களை வழங்கி தாய்மைத் தன்மையைப் பெற்று - உலக மொழிகளுக்குத் தாயாக - தாய்மொழியாக இருப்பது தெள்ளென தெரிகிறது.

தமிழே ஞாலத்தின் முதற்றாய்மொழி என்பதை நமது இன்னுயிர் தமிழ்மொழி இன்றும் இனிவரும் காலத்திற்கும் தானே நிறுவிக்கொள்ளும் என்பதை இனி சொல்லவும் வேண்டுமா?

மூலம்:-

திருத்தமிழ்

மொழிஞாயிறு ஞா.தேவநேயப் பாவாணர், தமிழ் வரலாறு