;

பாடல்கள்

Monday, December 28, 2009

திருவள்ளுவராண்டு 2041 (ஆங்கிலம் 2010) தமிழ் நாள்காட்டி



இன்னும் சில நாட்களில் 2010 புத்தாண்டு பிறக்கவுள்ளது. இது ஆங்கிலப் புத்தாண்டு; உலகமே பின்பற்றும் பொதுவான ஆண்டு என்பது எல்லாரும் அறிந்தது. 2010 சனவரித் திங்கள் 14ஆம் நாளில் தமிழர்களின் புத்தாண்டு பிறக்கவுள்ளது. இது திருவள்ளுவராண்டு 2041 ஆகும்.

ஆங்கிலத்தையும் ஆங்கிலப் புத்தாண்டையும் முன்படுத்தி நாள்காட்டிகள் வெளியிடப்படுகின்ற மரபைப் போல, தமிழையும் தமிழ்ப் புத்தாண்டையும் முன்னிறுத்தி தமிழ் நாள்காட்டி வெளிவந்துள்ளது. அதுவும், மலேசியா திருநாட்டில் நான்காவது ஆண்டாக இந்தத் தமிழ் நாள்காட்டி வெற்றிக்கொடிகட்டி வெளிவருகின்றது.

ஏற்கனவே, 2007, 2008, 2009 ஆகிய மூன்று ஆண்டுகளில் தொடர்ந்து வெளிவந்து தமிழர்களின் பாராட்டுகளை மட்டுமின்றி, மக்கள் தொலைக்காட்சியின் வாழ்த்தையும் பெற்ற இந்த நாள்காட்டியைத் தமிழியல் ஆய்வுக் களம் பெருமையோடு வெளியிட்டுள்ளது. மலேசியத் தமிழறிஞர் இர.திருச்செல்வம் இந்த நாள்காட்டியை வடிவமைப்புச் செய்துள்ளார்.

தமிழ் நாள்காட்டி வரலாற்றில் தனிப்பெரும் சிறப்பாக இதுகாறும் கண்டிராத மாபெரும் முயற்சியாக, இந்த நாள்காட்டி முழுமையாகத் தமிழிலேயே வெளிவந்துள்ளது. தமிழ்க்கூறு நல்லுலகம் முதன்முறையாகக் கண்டிருக்கும் தனித்தமிழ் நாள்காட்டி என இதனைத் துணிந்து குறிப்பிடலாம்.


நாள்காட்டிகளில் வழக்கமாக இடம்பெறுகின்ற அனைத்து விவரங்களும் இந்தத் தமிழ் நாள்காட்டியிலும் இடம்பெற்றுள்ளன. மலேசியச் சூழலுக்கு ஏற்ற வகையில், பொது விடுமுறைகள், பள்ளி விடுமுறைகள், சிறப்பு நாள்கள் என அனைத்தும் இடம்பெற்றுள்ளன.

தமிழ்ப் புத்தாண்டாம் தை முதல் நாளில் தொடங்குகிற இந்த நாள்காட்டியில் ஆங்கில நாள்காட்டியும் உள்ளடங்கி இருக்கிறது. ஆங்கில மாதம், நாள் ஆகியன குறிக்கப்பட்டுள்ளன. அதே வேளையில், தமிழுக்கும் முன்னுரிமை கொடுத்து நாள், மாதம், திதி, இராசி, நட்சத்திரம் என எல்லாமும் (தனித்)தமிழில் குறிக்கப்பட்டுள்ளன.

தமிழர்கள் கண்ட தமிழ் எண்கள் அழகாக வடிவமைக்கப்பட்டு இந்த நாள்காட்டியில் பயன்படுத்தப்பட்டுள்ளது. தமிழ் எண்களை அறியாதவர்களுக்கு உதவியாக தமிழ் எண்களுக்கு நடுப்பகுதியில் ஆங்கில எண்ணும் குறிக்கப்பட்டுள்ளது.

தமிழ் நாள்காட்டியின் உள்ளடக்கங்கள்:-

1)தேதியைக் குறிக்கும் எண்கள் தமிழ் எண்களாக உள்ளன.

2)திருவள்ளுவர் ஆண்டைப் பின்பற்றி மாதங்கள், கிழமைகள், நாட்கள் என அனைத்தும் தமிழ்ப்பெயர்களோடு அமைந்துள்ளன.

3)கிழமைகள் 7, ஓரைகள் 12 (இராசி), நாள்மீன்கள் 27 (நட்சத்திரம்), பிறைநாள்கள் 15 (திதி) முதலானவை தமிழில் குறிக்கப்பட்டுள்ளன.

4)50க்கும் மேற்பட்ட தமிழ்ச் சான்றோர்கள், அறிஞர்கள், தலைவர்கள் ஆகியோரின் பிறந்த நாள், நினைவு நாள்களோடு தமிழ் அருளாளர்களின் குருபூசை நாட்களும் குறிக்கப்பட்டுள்ளன.

5)மலேசியா, தமிழகம், தமிழீழம் உள்ளிட்ட 30 தமிழ்ப் பெரியோர்கள் - சான்றோர்கள் - தலைவர்களின் உருவப்படங்கள் இடம்பெற்றுள்ளன.

6)தமிழர்களின் வரலாற்றில் மறைக்கப்பட்டு; மறக்கப்பட்டுவிட்ட வானியல்(சோதிடக்) கலையை இந்த நாள்காட்டி சுருக்கமாக வெளிப்படுத்தி காட்டியுள்ளது.

7)குழந்தைகளுக்குப் பெயர் சூட்டுவதற்கான எழுத்து அட்டவணை நாள்காட்டியில் பின்னிணைப்பாக வழங்கப்பட்டுள்ளது. *(கிரந்த எழுத்துகள் அறவே கலவாமல் முழுமையாகத் தமிழ் எழுத்துகளையே கொண்டிருக்கும் பெயர் எழுத்து அட்டவணை இதுவாகும்.)

8)ஐந்திரக் குறிப்பு, நாள்காட்டிப் பயன்படுத்தும் முறை, பிறைநாள்(திதி), ஓரை(இராசி), நாள்மீன்(நட்சத்திரம்) பற்றிய விளக்கங்கள் ஆகியவை இரண்டு பக்கங்களில் நாள்காட்டியின் பின்னிணைப்பாக இடம்பெற்றுள்ளன.

9)ஒவ்வொரு ஓரை(இராசி) பற்றிய படத்தோடு அதற்குரிய வேர்ச்சொல் விளக்கமும் மிகச் சுருக்கமாகக் கொடுக்கப்பட்டுள்ளது.

10)தமிழின வாழ்வியல் மூலவர்களான வள்ளுவர் வள்ளலார் ஆகிய இருவரின் உருவப்படத்தை முகப்பாகத் தாங்கி, முழு வண்ணத்தில் தரமாகவும் தமிழ் உள்ளங்களைக் கவரும் வகையிலும் இந்நாள்காட்டி அமைந்திருக்கிறது.


உள்ளத்தில் தமிழ் உணர்வும் ஊக்கமும் கொண்டு தமிழ்நலத்திற்காக மு‎ன்னின்று செயலாற்றும் தமிழ் அன்பர்களும் ஆர்வலர்களும் இந்த நாள்காட்டியை வாங்கி ஆதரவு நல்குவதோடு பரப்பும் முயற்சியிலும் துணைநிற்கலாம். எந்த ஒரு வணிக நோக்கமும் இல்லாமல் முழுக்க முழுக்க தமிழ் வளர்ச்சியை மட்டுமே இலக்காகக் கொண்டு வெளிடப்பட்டுள்ள இந்த நாள்காட்டி ஒவ்வொரு தமிழர் இல்லத்திலும் இருக்க வேண்டும்.


இது நாள்காட்டி மட்டுமல்ல; தமிழ் எண்ணியல், வானியலை மீளக்கட்டிடும் ஆவணம். தமிழர் அனைவரும் தமிழில் பெயர்ச்சூட்டிக் கொள்ள உதவும் குட்டி ஐந்திறம்(பஞ்சாங்கம்). தமிழில் இருந்து காணாமற்போன கிழமை, திங்கள், திதி, இராசி, நட்சத்திரப் பெயர்களை மீட்டுக்கொடுக்கும் சுவடி. மொத்தத்தில், தமிழர் தமிழராக தமிழோடு தமிழ்வாழ்வு வாழ வழியமைத்துக் கொடுக்கும் வாழ்க்கைத் துணைநலம்.


தொடர்புக்கும் மேல் விளக்கத்திற்கும்:-
தமிழியல் ஆய்வுக் களம் – Persatuan Pengajian Kesusasteraan Tamil
No.17, Lorong Merbah 2, Taman Merbah,
14300 Nibong Tebal, SPS, Pulau Pinang. Malaysia

கைப்பேசி:- ம.தமிழ்ச்செல்வன் (6013-4392016)

ரிஞ்சிங் தமிழ்ப்பள்ளி முன்னாள் மாணவர் சந்திப்பு


Friday, December 04, 2009

தமிழும் இலக்கியமும் காக்கப்பட்டன; வாழ்க தமிழ்!




2010 தொடங்கி மலேசியக் கல்விச் சான்றிதல் எனப்படும் எசுபிஎம் (SPM) தேர்வில் 10 படங்களை மட்டுமே எடுக்க முடியும் என்ற கல்வி அமைச்சின் முடிவு அகற்றப்படுகிறது. 10 பாடங்களுக்குப் பதிலாகப் 12 பாடங்களை எடுக்க அமைச்சரவை இன்று இசைவு(அனுமதி) வழங்கியுள்ளது. மலேசியாஇன்று இணையத்தளம் இந்தச் செய்தியை உறுதிபடுத்தியுள்ளது.

இந்த விடயம் தொடர்பில் தமிழ், தமிழர் சார்ந்த பொது அமைப்புகள், அரசியல் கட்சிகள், சமய இயக்கங்கள், தமிழ் நாளேடுகள், தனியாட்கள் என அனைத்து தரப்பினரும் ஒரே நோக்கத்தில் ஒரே குரலில் தமிழ்மொழிக்காகப் பெரிய எழுச்சியோடு போராடினர் என்பதை நாடே அறிந்துள்ளது.

ஒட்டுமொத்த மலேசியத் தமிழர்களுக்குக் கிடைத்துள்ள மாபெரும் வெற்றியாக இதனைக் கருதலாம். தமிழ்மொழிக்கு வாழ்வா? சாவா? என்ற கடுமையான நெருக்கடியிலிருந்து தமிழையும் தமிழ் இலக்கியத்தையும் மீட்டெடுத்திருக்கும் மலேசியத் தமிழர்கள் இப்போது மிகுந்த மகிழ்ச்சியில் இருகின்றனர்.

இன்று மலேசியத் தமிழர்தம் போராட்டத்தின் வழி அடைந்திருக்கும் இந்த வெற்றிக்குப் பொருத்தமாக மலேசியப் பாவலர் ஒருவர் அன்றே பாடி வைத்திருக்கிறார் இப்படி:-

அவனவன் வாயா லன்றிப்
பிறனெவன் உண்ண வல்லான்
அவனவன் கண்ணா லன்றிப்
பிறனெவன் காண வல்லான்
அவனவன் செவியா லன்றிப்
பிறனெவன் கேட்க வல்லான்
அவனவன் மொழியினத்தைப்
பிறனெவன் காப்பான் வந்தே!
-(தமிழ்நெறி ஞாயிறு பாவலர் அ.பு.திருமாலனார்)
ஊர்கூடி தேர் இழுத்ததால் இழுத்ததால்தான் இந்த வெற்றி. ஒருமனதாக அனைவரும் போராடியாதால்தான் இந்த மாற்றம். ஒற்றுபட்டு நின்று குரல்கொடுத்ததால்தான் தமிழும் தமிழ் இலக்கியமும் மீட்கப்பட்டன – காக்கப்பட்டன - மலேசியத் தமிழரின் வாழ்வுரிமை நிலைநிறுத்தப்பட்டது.

இனிவரும் காலங்களிலும் நமது மொழியின உரிமைகளைக் காப்பதற்குத்..
தமிழா ஒன்றுபடு..
தமிழால் ஒன்றுபடு..
தமிழுக்காக ஒன்றுபடு..
தமிழருக்காக ஒன்றுபடு..

இதுதொடர்பான மலேசியாஇன்று செய்தியைப் படிக்க இங்கே சொடுக்கவும்.

Monday, November 23, 2009

உலக அப்பாக்களுக்குத் தமிழே தாய்

தற்குமுன் எழுதிய ‘இந்தியாவின் பழமையான மொழி சமற்கிருதம்’ என்ற தலைப்பிலான இடுகையில் ஒரு செய்தி இடம்பெற்று இருந்தது. அதாவது, தமிழே உலகத்தின் மூத்த மொழி - முதல் மொழி. அதற்கு சில அடிப்படை சான்றுகள் பட்டியலிடப்பட்டிருந்தன. அதில்,

//8.தாய் தந்தையரைக் குறிக்கும் தமிழ் முறைப்பெயர்கள், ஏறத்தாழ எல்லா மொழிகளிலும் திரிந்தும் திரியாதும் வழங்கி வருதல்.// என ஒரு சான்று இருந்தது. இதனை விரிவாக இந்த இடுகையில் காண்போமா?


‘அப்பா’ என்ற தமிழ்ச்சொல் இன்று உலகித்தின் பல மொழிகளில் நேரடியாகவும் – மருவியும் – திரிந்தும் – சிதைந்தும் வழங்கிவருகின்றது என்ற செய்தி வியப்பிற்குரிய ஒன்று. தமிழ்மொழியின் தொன்மைக்கும் – முதன்மைக்கும் – தாய்மைக்கும் – தலைமைக்கும் இதுவொரு மிகச் சிறந்த சான்றாதாரம் அல்லவா?

உலகத்தின் மூத்த மொழியாகவும் முதல் மொழியாகவும் இருப்பதற்கு தமிழுக்கு இருக்கும் தகுதியை நிறுவுதற்கு இதுவொன்றே போதுமல்லவா?

சரி வாருங்கள், ‘அப்பா’ என்கிற தமிழ்ச் சொல் உலக மொழிகளில் எப்படியெல்லாம் மாறியிருக்கிறது – மருவியிருகிறது என்று பார்ப்போம்.

தமிழ்:- அப்பன் // மலையாளம்:- அப்பன் // கன்னடம்:- அப்ப // துளு:- அப்ப // குடகு:- அப்பெ // கோண்டி:- ஆப்போ // துளு:- அப்பெ(தாய்) //

மராத்தி:- பாப் // குசராத்தி:- பாப் // இந்தி:- பாப் // வங்கம்:- பாப், பாபா //

மெச்சு:- அப்ப // போர்த்துக்கீசியம்:- அப // சிங்களம்:- அப்பா

எகிப்து:- ஆப் // அரபி:- ஆப் // கலதேயம்(Chaldean):- அப்பா // சீரியம்(Syriac):- ஆபோ // அரமிக்கு(Aramic):- அப்பா // அபிசினியம்:- ஆப்பாத்

இலத்தின்:- பப்பா // பிராகுவீ:- பப்பா // ஆங்கிலம்:- பப்பா

ஓசித்தியம்(Ostiak):- ஊப், ஓப் // பின்னியம்(Finnish):- அப்பி // அங்கேரியம்:- இப், இப்ப, அப்பொஸ்

அப்பாவுக்கு தமப்பன், தகப்பன், அத்தன் என்றும் தமிழில் சொற்கள் உள்ளன. இவை எவ்வாறு பிற மொழிகளில் திரிந்துள்ளன என இனி காண்போம்.

தமிழ்:- தம்+அப்பன்= தமப்பன்= தகப்பன்.

தமிழ்:- அத்தன். // பிராகிருதம்:- அத்தா

துருக்கி:- அத்த // அங்கேரியம்:- அத்ய // பின்னியம்(Finnish):- ஆத்த // செர்மியம்(Chermiss):- ஆத்யா // மார்தூவின்:- அத்தை // ஓசித்தியம்(Ostiak):- அத்த // இலாப்பியம்(Lappish):- அத்ஜெ(பாட்டன்)

கோதியம்(Gothic):- அத்தன் // இலத்தின்:- அத்த // கிரேக்கம்:- அத்த

அத்தன் என்பதைப் போலவே அச்சன் என்பதும் தமிழ் சொல்தான். இந்த ‘அச்சன்’ இன்று மலையாளத்தில் அப்படியே இருக்கிறது. அச்சன் என்ற சொல் மற்ற தென்னிந்திய மொழிகளில் எப்படி மாறியிருக்கிறது பாருங்கள்.

தமிழ்:- அத்தன்= அச்சன் // மலையாளம்:- அச்சன்

கன்னடம்:- அஜ்ஜ(பாட்டன்) // துளு:- அஜ்ஜெ(பாட்டன்) // குடகு- அஜ்ஜெ(பாட்டன்) // குருக்கு:- அஜ்ஜொஸ்(பாட்டன்) // பிராகிருதம்:- அஜ்ஜ // மராத்தி:- ஆஜா(பாட்டன்) // இந்தி:- ஆஜா(பாட்டன்)

இலாப்பியம்(Lappish):- ஐஜ. அத்ஜ(பாட்டன்)

அப்பாவை ஐயன் என அழைக்கும் பழக்கமும் தமிழருடையதே. ஐயன் என்பது அப்பாவை மட்டுமல்லாது தமையன், பெரியோன், ஆசிரியன், குரு, முனிவன் என பல பொருளையும் குறிக்கிறது.

தமிழ்:- ஐயன் // மலையாளம்:- அய்யன் // கன்னடம்:- அய்ய // தெலுங்கு:- அய்ய, அய // துளு:- அய்யெ(ஆசிரியன்) // குடகு:- அய்யெ(தந்தையுடன் பிறந்தான்) // துடவம்:- இன், எயி // கோலாமி:- அய்யா(பாட்டன்), பஅய்ய

போர்த்துக்கீசியம்:- ஐயோ(ஆசிரியன்)

தமிழ்:- தந்தை // கன்னடம்:- தந்தெ // தெலுங்கு:- தண்ட்ரி

இப்படியாக, அப்பாவைக் குறிக்கும் தமிழ்ச் சொற்கள் உலக மொழிகள் பலவற்றிலும் அப்படியே இருக்கிறது அல்லது ஓரளவு மாற்றமடைந்து காணப்படுகிறது. இதிலிருந்து தமிழ்மொழி உலக மொழிகளுக்கெல்லாம் சொற்களை வழங்கி தாய்மைத் தன்மையைப் பெற்று - உலக மொழிகளுக்குத் தாயாக - தாய்மொழியாக இருப்பது தெள்ளென தெரிகிறது.

தமிழே ஞாலத்தின் முதற்றாய்மொழி என்பதை நமது இன்னுயிர் தமிழ்மொழி இன்றும் இனிவரும் காலத்திற்கும் தானே நிறுவிக்கொள்ளும் என்பதை இனி சொல்லவும் வேண்டுமா?

மூலம்:-

திருத்தமிழ்

மொழிஞாயிறு ஞா.தேவநேயப் பாவாணர், தமிழ் வரலாறு

தமிழ்த்தாய் பெற்றெடுத்த உலகத்தின் அம்மாக்கள்

த்தாய் பெற்றெடுத்த உலகத்தின் அம்மாக்கள்



ருமுதுகுரவர் என்பது தாய் தந்தை இருவரையும் குறிக்கும் தமிழ்ச் சொல்லாட்சி. உலக மொழிகளை மூன்று முகமையான குடும்பங்களில் வகைப்படுத்துகிறார்கள். இந்த மூன்று மொழிக்குடும்பங்களிலும் இருமுதுகுரவரின் பெயர்கள் தமிழாகவே இருக்கின்றன அல்லது தமிழின் திரிபாக இருகின்றன. இதிலிருந்து, பழமையான உலகமொழிகளுக்குத் தமிழ் சொற்கொடை வழங்கியிருக்கிறது என்பது தெரியவருகிறது. அதுமட்டுமல்லாம், தமிழ் பல பழமையான மொழிகளுக்குத் தாயாக இருந்திருப்பதும் தெரியவருகிறது.

‘உலக அப்பாக்களுக்குத் தமிழே தாய்’ என்ற கடந்த பதிவில் ‘அப்பா’ எனும் தமிழ்ச்சொல் உலகமொழிகளில் எவ்வாறு வழங்கிவருகிறது என்று கண்டோம். அதுபோலவே, இந்த முறை அதோபோல ‘அம்மா’ எனும் தமிழ்சொலின் பரவலைக் காண்போம் வாருங்கள்.

தமிழில் அம்மாவை குறிக்கும் சொற்கள் அம்மை, அம்மன் ஆகியன. தமிழர் வழிபடும் பெண்தெய்வத்திற்கும் இப்பெயரை இட்டுள்ளனர். இச்சொற்கள் பிறமொழிகளில் ஆளப்படுகின்றன.

தமிழ்:- அம்மை(தாய்), அம்மன் (காளி, பெண்தெய்வம்)

மலையாளம்:- அம்ம, உம்ம // கன்னடம்:- அம்ம, தெஅம்ம, கோஅம்மன்(தெய்வம்), குஅம்மெ, துஅம்ம // கோலாமி:- அம்ம, நாஅம்ம // பிராகுவீ:- அம்மா // துளு:- அம்மெ(தந்தை).

குசராத்தி:- மா // இந்தி:- மாம் // வங்காளம்:- மா.

திபேத்தியம்:- ம, மொ // மலாய்:- அமா, எமா // சீனம்:- மா.

சமாயிதம்(Samoiede):- அம்ம // செனசெய்(Jenesei):- அம்ம // அம் // எசுத்திரியன்(Estrian):- எம்ம // பின்னியம்(Finnish):- எமா // அங்கேரியம்:- எமெ // சிந்தி:- அமா.

எபிரேயம்:- ஏம் // அரபி:- உம் // சீரியம்(Syriac):- ஆமோ.

ஐசிலாந்தியம்:- அம்ம(பாட்டி) // பழஞ்செருமானியம்:- அம்ம // செருமானியம்:- அம்மெ(செவிலி) // ஆசுக்கன்(Oscan):- அம்ம // ஆங்கிலம்:- மம்ம, மம் // பிரெஞ்சு:- மமன் // இசுபானியம்(Spanish):- மம // கிரேக்கம்:- மம்ம, மம்மெ // சமற்கிருதம்:- அம்மா, அம்பா.

அம்மை என்பது அவ்வை என தமிழில் மருவியொலிக்கும். தாய், பாட்டி என்பன இவற்றின் பொருள்கள்.

தமிழ்:- அம்மை = அவ்வை

கன்னடம்:- அவ்வ, அவ்வெ(தாய், பாட்டி, கிளவி) // தெலுங்கு:- அவ்வ // துளு:- அப்பெ(ஆயா) // குடகு:- அவ்வெ // கோலாமி:- அவ் // துடவம்:- அவ் // பர்சி:- அவ்வ(பாட்டி) // கோண்டி:- அவ்வல்.

இலத்தின்:- அவுஸ்(பாட்டன்), ஆவிய(பாட்டி), அவ்-உங்குளுஸ்(அம்மான்)

அம்மாவைக் குறிக்கும் மற்றொரு தமிழ்ச்சொல் அன்னை என்பது அறிந்ததே. இதன் பரவலை இனி பார்ப்போம்.

தமிழ்:- அம்மை, அன்னை

இந்தி:- அன்னி(செவிலி)

துருக்கி:- அன்ன, அன // ஒசித்தியம்(Ostiak):- அனெ, மா, அனை // அங்கேரியம்:- அன்ய, பின்அன்ய.

அபிசினியம்:- இன்னத் // ஓசித்தியம்(Ostiak:- இன(பெண், மனைவி).

அத்தி, ஆத்தி, ஆத்தை என்பனவும் அம்மாவைக் குறிக்கும் தமிழ்சொற்களே. பழந்தமிழில் இவற்றைக் காணலாம். இன்றும் மக்கள் வழக்கில் இவை உள்ளன. எதையாவது வியந்து சொல்லும்போது பெண்கள் ‘அடியாத்தி’ என்று சொல்லுவதைக் கவனிக்கவும்.

தமிழ்:- அத்தி, ஆத்தி, ஆத்தை

மலையாளம்:- ஆத்தோள் // சிங்களம்:- அத்தா(அம்மாய்) // பின்னியம்(Finnish):- ஐத்தி

கோதியம்(Gothic):- ஐத்தின் // சமற்கிருதம்:- அத்தா(தாய், அக்கை, பெரியதாய்), அத்தி(அக்கை).


அம்மாவை அத்தி, அச்சி, ஆச்சி என அழைக்கும் வழக்கமும் தமிழரிடம் உண்டு. பாட்டியை ஆச்சி என இன்றும் அழைக்கின்றனர்.

தமிழ்:- அத்தி, அச்சி, ஆச்சி.

மலையாளம்:- அச்சி, ஆச்சி(தாய், செவிலி) // கன்னடம்:- அச்சி(தாய்), அஜ்ஜி(பாட்டி) // துளு:- அஜ்ஜி(பாட்டி) // குருக்கு:- அஜ்ஜீ(பாட்டி) // மலாய்:- மாச்சி

தமிழ்:- அக்கை, (தாய், தமக்கை), அக்காள்(தமக்கை), அக்கை = அக்கன்.

கன்னடம்:- அக்க // தெலுங்கு:- அக்க // துளு:- அக்க, அக்கெ // கோத்தம்:- அக்ன // துடவம்:- ஓக்ன் // குடகு:- அக்கெ.

மராத்தி:- அக்கா // இலத்தின்:- அக்கா(தாய்) // சம்ற்கிருதம்:- அக்கா(தாய்), மங்கோலியம்:- அக்கு(அண்ணன்) // துங்குசியம்:- அக்கி(அண்ணன்)

தமிழ்:- ஆய் // மராத்தி:- ஐய // பிராகுவீ:- ஐய // போர்த்துக்கீசியம்:- ஐய(செவிலி) // ஆங்கிலம்:- ஆயா(செவ்லி) // மலாய்:- ஆயா(அப்பா)

இத்தனையும் பார்த்தோம். இனி, தாய் என்பதைக் காண்போம்.

தமிழ்:- தாய் // மலையாளம்:- தாய் // கன்னடம்:- தாய் // தெலுங்கு:- தாயி.

தமிழ்:- தள்ளை // மலையாளம்:- தள்ள // தெலுங்கு:- தல்லி // பர்சி:- தல்.



இப்படியாக, உலக மொழிகள் பலவற்றிலும் தமிழ்ச் சொற்கள் இருக்கின்றன என்பதை இன்றை சொல்லாராய்ச்சித் துறை (Etimology) ஏற்றுக்கொண்டிருக்கிறது. மேலை நாடுகளில் வெளியிடப்பெறும் வெப்சுதர்(Webster) முதலான சொல்லாராய்ச்சி அகரமுதலிகள் உலகமொழிகளில் காணப்படும் தமிழின் தடங்களையும் மூலங்களையும் மறைக்காமல் – மறுக்காமல் பறைசாற்றிக் கொண்டுதா இருக்கின்றன. ஆனால் பாவம், தமிழன்தான் தன் மொழியின் பெருமையை அறியாமல் இருக்கின்றான்.
அதனால், எங்கும் - எதிலும் - எப்போதும் தன்னைத் தாழ்வாகவே எண்ணுகின்றான். தன்மொழி உணர்வே தமிழனுக்கு தன்னம்பிக்கையும் தன் இனமான உணர்வையும் கொடுக்கும். அதுவொன்றே, தமிழனைத் தலைநிமிர்ந்து வாழவைக்கும்.
மூலம்:-

திருத்தமிழ்

மொழிஞாயிறு ஞா.தேவநேயப் பாவாணர், தமிழ் வரலாறு



Wednesday, November 04, 2009

ஒவ்வொரு வருடமும் நவம்பர் 27ஆம் நாள், மாவீரர் வாரத்தின் இறுதி நாள்





ஒவ்வொரு வருடமும் நவம்பர் 27ஆம் நாள் , மாவீரர் வாரத்தின் இறுதி நாள்; தாயக விடுதலைக்காக தம்முயிரினை ஈந்த மாவீரர்களின் புனிதக் கல்லறைகளில் சிரந்தாழ்த்தி, மலர்தூவி, ஒளிதீபமேற்றும் உன்னதநாள்; நம் தாயக விடுதலைக்காக இதுவரை நாம் இழந்தவற்றை மீள்நினைத்து இழந்த மாவீரர்களின் இலட்சியக் கனவினை ஈடேற்ற அவர் வழிச்சுவடு தொடருவோம் என உறு...தியெடுத்துக் கொள்ளும் வீரநாள்; ஈழத்தமிழர்கள் அனைவரிற்கும் ஒரு எதிர்பார்ப்பினைக் கொடுக்கும் நாள்; அன்றுதான் நம் தேசியத்தலைவர் அவர்களின் கருத்துக்களை அவரது உரையின் வாயிலாக நாம் அறிந்து கொள்ளும் அரிய நாள்.

Thursday, October 15, 2009

தான் தோற்கடிக்கப்பட்ட, அடிமைப்படுத்தப்பட்ட, இழிவுபடுத்தப்பட்ட ஒரு நாளை மகிழ்ச்சியாக கொண்டாடுகின்ற ஒரு வெட்கம் கெட்ட இனமும் இந்த உலகத்தில் உண்டு.

தீபா”வலி”யும் தமிழரும்!

* இவ் விடயம் 14. 10. 2009, (வியாழன்), தமிழீழ நேரம் 20:10க்கு பதிவு செய்யப்பட்டது கட்டுரைகள்,
உலகில் வாழும் அனைத்து இனங்களும் பல வகையான விழாக்களை ஆண்டு தோறும் கொண்டாடி வருகின்றன. போரில் வெற்றி பெற்ற நாள், விடுதலை அடைந்த நாள், வருடத்தின் முதன் நாள், கடவுளோ அல்லது கடவுளின் தூதரோ பூமிக்க வந்ததாக நம்பப்படுகின்ற நாள் என்று மகிழ்ச்சியையும், வெற்றியையும், விடுதலையையும் குறிக்கின்ற பலவிதமான விழாக்களை மனித இனம் கொண்டாடி வருகிறது.

ஆனால் தான் தோற்கடிக்கப்பட்ட, அடிமைப்படுத்தப்பட்ட, இழிவுபடுத்தப்பட்ட ஒரு நாளை மகிழ்ச்சியாக கொண்டாடுகின்ற ஒரு வெட்கம் கெட்ட இனமும் இந்த உலகத்தில் உண்டு. அது வேறு யாரும் அல்ல. கல் தோன்றி மண் தோன்றா காலத்து முன்னே வாளோடு தோன்றிய மூத்த குடி என்று தன்னை அறிமுகம் செய்கின்ற தமிழினம்தான் அது. பொங்கல் போன்ற விழாக்களுக்கு கொடுக்காத முன்னுரிமையை தீபாவளிக்கு கொடுத்து, தன்னுடைய அடிமை சாசனத்தை ஆண்டு தோறும் புதுப்பித்துக் கொண்டிருக்கிற தமிழினமாகிய நாங்கள்தான் அந்த பெருமைக்குரியவர்கள்.

இதோ! இந்த ஆண்டும் தீபாவளி வந்து விட்டது. தமிழர்கள் புத்தாடை அணிந்து கோயிலுக்கு போகிறார்கள். நேரிலும், தொலைபேசியிலும் “தீபாவளி வாழ்த்துக்கள்” சொல்லி மகிழ்கிறார்கள். தமிழர் கடைகளில் தீபாவளி சிறப்பு விற்பனை விளம்பரப்படுத்தப்படுகின்றன. தீபாவளி திரைப்படங்கள் அணி வகுக்கின்றன. தொலைக்காட்சி, வானொலி போன்ற ஊடகங்கள் தீபாவளி சிறப்பு நிகழ்ச்சிகளை வழங்குகிறன. புத்தக நிறுவனங்கள் தீபாவளி சிறப்பு மலர் வெளியிடுகின்றன. கொண்டாட்டம் களை கட்டுகிறது.

ஆனால் இந்த தீபாவளியின் பின்னணி வரலாறு எத்தனை பேருக்கு தெரியும்? எங்களின் மூதாதையர் அழிக்கப்பட்ட நாளை, தமிழினம் தோற்கடிக்கப்பட்ட நாளை நாம் கொண்டாடுகிறோம் என்பது எத்தனை பேருக்கு தெரியும்?

அதைப் பார்ப்பதற்கு முன் தீபாவளியை தமிழினத்திற்குள் திணித்த ஆரியப் பார்ப்பனர்கள் தீபாவளி குறித்து சொல்லுகின்ற கதையை சுருக்கமாகப் பார்ப்போம்.

முன்பொரு காலத்தில் ஒரு அரக்கன் இருந்தானாம். அவன் பூமியை பாயாக சுருட்டி கடலுக்குள் ஒளித்து வைத்துவிட்டானாம். படைப்புத் தொழிலை செய்வதற்கு பூமி இல்லையே என்று கவலைப்பட்ட பிரம்மா விஸ்ணுவிடம் முறையிட்டாராம். விஸ்ணு பன்றியாக மாறி அரக்கனோடு சண்டை போட்டு அவனை கொன்று பூமியை மீட்டாராம். பூமிக்கு தன்னை மீட்ட பன்றியின் மீதே காதல் வந்துவிட்டதாம். பன்றியும் சரியென்று சொல்ல இருவரும் உறவு கொண்டார்களாம். அதனால் ஒரு பிள்ளை பிறந்ததாம். அவன்தான் நரகாசுரன் என்ற அரக்கனாம். அவன் தவம் செய்து தன் தாயைத் தவிர வேறு யாராலும் கொல்லப்பட முடியாத வரம் பெற்றானாம். வரம் பெற்ற அரக்கன் எல்லோரையும் கொடுமைப்படுத்தினானாம். கடைசியில் விஸ்ணு கிருஸ்ணனாகவும் பூமாதேவி சத்தியபாமாவாகவும் அவதாரமெடுத்து நராகசுரனோடு போரிட்டார்களாம். கடைசியில் நரகாசுரன் பெற்ற வரத்தின்படி அவனுடைய தாயாகிய சத்தியபாமாவால் கொல்லப்பட்டானாம். அவன் கொல்லப்பட்ட நாள்தான் தீபாவளியாம்.

இப்படி ஒரு ஆபாசமான புராணக் கதையைக் அடிப்படையாகக் கொண்டு இந்த தீபாவளியை ஆரியப் பார்ப்பனியம் தமிழர்களுக்குள் திணித்தது. உருண்டையாக இருக்கின்ற பூமியை எப்படி பாயாக சுருட்டலாம் என்றோ, பூமியிலே இருக்கின்ற கடலுக்குள் எப்படி பூமியையே ஒளித்து வைக்கலாம் என்றோ, பூமியாலும் பன்றியாலும் உறவு கொள்ள முடியுமா என்றோ கேள்விகளை எழுப்ப முடியாதபடி தமிழினத்தை மடமைக்குள் தள்ளியது

ஆனால் தீபாவளி கொண்டாடப்படுவதன் பின்னணி வேறு. இங்கே நராகசுரன் என்று உருவகப்படுத்தப்படுபவன் யார்? புராணங்களில் அசுரர்கள் என்று சொல்லப்படுபவர்கள் யார்? இதற்கு பதில் தெரிந்தவர்கள் தீபாவளியை கொண்டாட மாட்டார்கள். தெரிந்த பின்பும் கொண்டாடினால் அவர்கள் சூடு சுரணை உள்ளவர்களாக இருக்க மாட்டார்கள்.

பாரத கண்டத்தின் வரலாறு என்பது ஆரிய திராவிடப் போரை அடிப்படையாகக் கொண்டது. திராவிடர்கள் எனப்படுகின்ற தமிழர்கள் ஆண்டு கொண்டிருந்த பெரும் நிலப்பரப்பை வந்தேறு குடிகளான ஆரியர்கள் மெது மெதுவாக ஆக்கிரமிக்கத் தொடங்கினார்கள். நில ஆக்கிரமிப்போடு, மொழி ஆக்கிரமிப்பும், பண்பாட்டு ஆக்கிரமிப்பும் நிகழந்தது. ஆரியர்களின் இந்த ஆக்கிரமிப்பை எதிர்த்து தமிழர்கள் நீண்ட காலம் வீரப் போர் புரிந்தார்கள். இந்தப் போர்கள்தான் புராணக் கதைகளில் தேவர்களுக்கும் அசுரர்களுக்கும் நடந்த போர்களாக வர்ணிக்கப்படுகின்றன.

சுர பானம் அருந்துகின்ற ஆரியர்கள் சுரர்கள் என்று அழைக்கப்பட்டார்கள். சுர பானம் அருந்தாத திராவிடர்கள் அசுரர்கள் என்று குறிப்பிடப்பட்டார்கள். அத்துடன் அசுரர்கள் தெற்கே வாழ்பவர்கள் என்றும் புராணக் கதைகளில் குறிப்பிடப்படுகிறார்கள். கிருஸ்ணனும் சரி அதற்கு முந்தையவனாக சொல்லப்படுகின்ற இராமனும் சரி, அசுரர்களை அழிப்பதற்கு தெற்கு நோக்கி படை எடுத்து வந்ததாகவே ஆரியர்களின் புராணங்கள் சொல்லுகின்றன. அசுரர்கள் கறுப்பாக இருப்பார்கள் என்றும் சுட்டிக்காட்டப்படுகிறார்கள். புராணக் கதைகளை ஆரய்ந்த பாரதத்தை சேர்ந்த நடுநிலையான ஆராய்ச்சியாளர்களும், மேல் நாட்டு ஆராய்ச்சியாளர்களும் அசுரர்கள் என்று திராவிடர்களையே குறிப்பிடப்படுகிறது என்று கூறி உள்ளார்கள்.

ஆரியர்களுக்கும் திராவிடர்களுக்கும் நடந்த போரை கூறுகின்ற கதையே இராமயணம். அன்று தமிழ் மண்ணை ஆண்ட மன்னன் இராவணனாக உருவகப்படுத்தப்படுகிறான். ஆக்கிரமிப்பு போர் நடத்திய ஆரியர்களின் மன்னனாக இராமன் இருக்கின்றான். தமிழ் மண்ணின் பல பகுதிகளை கைப்பற்றி தமிழ் மன்னர்களை ராமன் வெற்றி கொள்கிறான். கடைசியில் தமிழர்களின் தலைநகரான இலங்கை வரை சென்று பல சூழ்ச்சிகள் செய்து இராவணனையும் கொல்கிறான். இதுதன் இராமயணக் கதை. இராவணனை பேரரசனாகக் கொண்டே அன்று தமிழர்களின் அனைத்து அரசுகளும் இருந்தன என்பதை இராமாயணத்தை ஆராய்கின்ற போது புரிந்து கொள்ள முடிகிறது.

இராவணனின் வீழ்ச்சிக்கு பிறகு சில காலம் கழித்து ஆரிய ஆக்கிரமிப்பை எதிர்த்து போர் புரிந்த தமிழ் மன்னர்களில் ஒருவனே நரகாசுரன். நரகாசுரனும் மற்றைய பல மன்னர்களும் ஆரிய ஆக்கிரமிப்பை எதிர்த்து போர் புரிந்து வீர மரணம் அடைந்தார்கள்.

கடைசியில் தமிழினத்தை வெற்றி கொண்ட ஆரியர்கள் தமிழர்களின் வரலாற்றை திரிவுபடுத்தினார்கள். இன்று விடுதலைப் போராளிகளை ஆக்கிரமிப்பாளர்கள் பயங்கரவாதிகள் என்று சொல்வது அன்று ஆரியர்கள் அன்று தமிழின விடுதலைக்காக போரடியவர்களை அரக்கர்கள் என்று சொன்னார்கள். முறிக்கிய மீசையோடு கம்பீரமாக நின்று தமிழ் மண்ணைக் காக்க இறுதிவரை போராடி தன்னுயிரை ஈந்தவர்களுக்கு கொம்புகளும் கோரமான பற்களும் முளைத்து விட்டன.

ஒரு முறை சிந்தித்துப் பாருங்கள்! சிங்களப் படைகள் யாழ் நகரைக் கைப்பற்றிய நாளை நாம் கொண்டாடுவோமா? நிச்சயமாகக் கொண்டாடுவோம், சிங்களம் தமிழினத்தை முழுமையாக வெற்றி கொண்டால். அப்பொழுது எங்களின் விடுதலைப் போரளிகளுக்கும் கொம்புகளும், கோரமான பற்களும் முளைக்கும். வெற்றி பெற்றவன் திணிப்பதே வரலாறு என்று ஆகின்றது. தோற்று போனவனின் வரலாறு அவனுடனேயே புதைகுழிக்குள் புதைக்கப்படுகிறது. எமது தமிழ் மன்னர்கள் அன்று தோற்றுப் போனார்கள். அதனால் அரக்கர்கள் ஆகி விட்டார்கள்.

இப்படி அரக்கன் ஆக்கப்பட்டு விட்ட ஒரு விடுதலைவீரனின் நினைவுநாளை நாம் மகிழ்ச்சியாகக் தீபாவளி என்று கொண்டாடுகிறோம். ஆரியர்கள் தமிழினத்தை வென்றது மாத்திரம் அன்றி, வென்ற நாளை தமிழர்களையோ கொண்டாட வைத்து விட்டார்கள். இதை உணர்ந்து தமிழினம் இந்த தீபாவளியை கொண்டாடுவதை நிறுத்த வேண்டும். இங்கே இன்னும் ஒன்றையும் குறிப்பிடுதல் பொருத்தமாக இருக்கும். இன்றைய நாகரீக உலகில் யாருடைய இறப்பும் கொண்டாடப்படுவதில்லை. எம்மை ஆயிரக்கணக்கில் கொன்றொழித்த எதிரிகள் கொல்லப்பட்ட நாளை நாங்கள் யாரும் கொண்டாடுவதில்லை. கோடிக்கணக்கில் மனிதர்களை கொன்ற கிட்லரின் இறப்பையும் யாரும் கொண்டாடுவதில்லை. இப்படி யாராக இருந்தாலும், ஒரு இறப்பு கொண்டாடப்படுவதில்லை. ஆனால் நாம் எமக்காக உயிரை ஈந்த ஒரு மன்னனின் நாளை தீபாவளி என்று மகிழ்ச்சியாக கொண்டாடுகிறோம். இந்த நிலை மாறும் நாளே உண்மையில் தமிழினம் விடுதலை அடைந்த நாளாக இருக்கும்.

கு.கண்ணன்
பெரியார் திராவிடர்கழகம்
“தமிழ்க் குடில்”
6/28, புதுத்தெரு
கண்ணம்மாப்பேட்டை
தியாகராயர் நகர்
சென்னை – 6000 017

Sunday, October 11, 2009

திருவைத் திருடிய திருடர்கள்


திருவைத் திருடிய திருடர்கள்

இரா.திருமாவளவன்

திரு எனும் அருந்தமிழ்ச் சொல் தமிழில் உயர்ந்த பொருளை உணர்த்தும் உயர்தனிச் சொல்லாகும். எல்லாச் சிறப்பும் திரண்டது எனும் பொருளில் இச்சொல் உருவாகியிருக்கிறது.

திரு - திரள் - திரட்சி என்பதே இதன் பொருள் விரி.

உயர்நிலை தகுதியுடைய ஆட்கள் , இடங்கள் , நூல்கள், கருத்துகள் முதலானவற்றுக்குத் திரு சேர்த்து எழுதுவதும் , சொல்வதும் தமிழர் பண்பு ; மாண்பு.

இவ்வடிப்படையில் தான் திருக்குறள், திருமுருகாற்றுப்படை , திருப்புகழ், திருவாசகம், திருவாய்மொழி, திருமந்திரம் , திருமுறை என நூல்கள் குறிப்பிடப்பட்டன. திருவள்ளுவர், திருநாவுக்கரசர், திருஞானசம்பந்தனர், திருமூலர் எனச் சான்றோர்கள் அழைக்கப்பட்டனர். திருப்பரங்குன்றம், திருமலை, திருவாரூர் , திருச்செந்தூர், திருவேங்கடம் என ஊர்கள் அழைக்கப்பட்டன. திருமகள், திருமாரியம்மன், திருமுருகன், திருமால் எனத் தெய்வப் பெயர்கள் அமைந்தன. சிவனிய அன்பர்கள் தாங்கள் இடும் நெற்றிக் குறியைத் திருநீறு என்றும் மாலியர்கள் திருமண் என்றும் அழைத்தனர்.

செல்வம், சிறப்பு, கலை, பண்பு, மாண்பு, அறிவு, திறன், ஒழுக்கம், உயர்வு, புகழ், கல்வி என பல்வேறு உயர்வு கருத்துகளை இச்சொல் வழங்குவதை மறுப்பார் மறைப்பார் உண்டா?

தமக்குள்ளாகப் பேராற்றல் கொண்ட ஒருவரை , இவர் கருவிலே திருவுடையார் எனத் தமிழுலகம் சிறப்புறுத்துவதை நாம் அறிவோம்.

இத்தகு திருவைத் திருடி வாயில் மென்று குதப்பி வெளியிலே ஸ்ரீ எனக் கக்கினர் வடநாட்டார். தமிழரைத் த்ரமிளர் என்றும், பவளத்தை பிரவாளம் என்றும் மதங்கத்தை ம்ருதங்கம் என்றும் மெதுவை மிருது என்றும் படியை பிரதி என்றும் சமற்கிருதத்தில் திரித்தது போல் திருவை ஸ்ரீ எனச் சிதைத்தனர். இச்சிதைவை மீண்டும் தமிழில் புகுத்தி திருவிருந்த இடத்தில் எல்லாம் ஸ்ரீ எனும் கழிவினைச் சேர்த்தனர். ஸ்ரீ யைச் சேர்த்தால் தெய்வ அருள் கூடும் என்று புளுகிப் புனைந்துரையிட்டு தமிழரை மயக்கி மடையராக்கினர். மூடத்தமிழர் பலர் திருமுருகனை ஸ்ரீமுருகன் என்றும் திருமாரியம்மனை ஸ்ரீமாரியம்மன் என்றும் திருமகளை ஸ்ரீமகள் என்றும் மாற்றி அழைக்கலாயினர்; எழுதலாயினர். திருவாளர் ஸ்ரீமான் ஆகினார். திருவாட்டி ஸ்ரீமதி ஆகினார். ஆங்கிலச சொல்லையும் தமிழ்ச் சொல்லையும் கலந்து நடுசெண்டர் என்று சொன்னது போல் திருமுருகன் ஸ்ரீமுருகன் ஆனான். திரு மெய்யப்பன் என்று அழைக்க வேண்டிய இடத்தில் ஸ்ரீ மெய்யப்பன் என்று அழைக்கலாயினர்.

அண்மையில் கோலாலம்பூரில் ஒரு நூல் வெளியீட்டு விழா நிகழ்ந்தது. தகைமிகு ஐ. தி. சம்பந்தன் அவர்கள் எழுதிய கருப்பு யூலை 83 எனும் நூல் அன்று வெளியீடு கண்டது. 1983 ஆம் ஆண்டு சிங்கள இன வெறியர்கள் தமிழர் மீது நிகழ்த்திய இனப்படுகொலையைச் சான்று பட விளக்கும் அரிய நூல்தான் அது. அந்நிகழ்வுக்கு யாழ்ப்பாணத் தமிழர்களே பெரும்பாலார் வந்திருந்தனர். அவர்களில் பலர் கறுப்புத் துறைமார்களாக இருக்கின்றமையால் நிகழ்ச்சியை ஆங்கிலத்திலும் வழிநடத்தினர். நிகழ்ச்சியை வழிநடத்திய அம்மையார் நாட்டின் தலைச் சிறந்த பல்கலைக்கழகமாக இருக்கின்ற மலாயாப் பல்கலைக் கழகத்தின் முன்னாள் தமிழ்ப் பேராசிரியை , திலகவதி அம்மையாராவார். அது பற்றி நமக்கு எந்தச் சிக்கலும் இல்லை. ஆனால் நிகழ்ச்சியை வழி நடத்திய பேராசிரியை மூச்சுக்கு மூச்சு ஒவ்வொரு பெருமகரின் பெயரினை விளிக்கின்ற போதும் ஸ்ரீ அப்புத்துரை என்றும் ஸ்ரீ ப.கு. சண்முகம் என்றும் ஸ்ரீ பாலகோபால நம்பியார் என்றும் திருவை அகற்றி திரிந்த சிதைந்த ஸ்ரீ யைச் சேர்த்து விளித்து தம் ஆழ்ந்த வடமொழிப் பற்றை வெளிப்படுத்திக் கொண்டார். திலகவதி அம்மையார் வாழ்வதும் வாழ்ந்ததும் தமிழால். அவர் உண்டது தமிழ்ச் சோறு. இப்படித்தான் சிலர் தமிழை வைத்துப் பிழைப்பு நடத்திக் கொண்டு தம் சொந்த தாய்மொழிக்கே உலை வைத்துக் கொண்டுள்ளனர். அவர்களுள் திலகவதியாரும் ஒருவரோ என நாம் எண்ண வேண்டியுள்ளது.

இந்தியாவில் இயங்கும் ஆர். எஸ்.எஸ். எனும் மதவெறி அமைப்பின் கிளையாக மலேசியாவில் இயங்கும் இந்து சேவை சங்கம் எனும் அமைப்பினரும் தங்களின் உயிர்க் கொள்கையாக இத்தகு தமிழ் அழிப்பு பணியினைத் திட்டமிட்டு நாடெங்கிலும் நிகழ்த்தி வருகின்றனர். இவர்களுக்குச் சமற்கிருதந்தான் மூல மொழி தெய்வ மொழி என எல்லாம். ஆனால் அந்தத் தேவ பாடையில் ஒரு போதும் இவர்களால் பேச முடியாது. தேவ பாடையின் பெருமையினைப் பேசுவதற்கும் எழுதுவதற்கும் நீச மொழியான தமிழ்தான் தேவைப் படுகின்றது. என்ன வெட்கக் கேடு!

இனி உண்மைத் தமிழ் உணர்வாளர்களே ! நாம் செய்ய வேண்டியது என்ன அன்பு கூர்ந்து சிந்தியுங்கள். செத்த மொழிக்காக வாழும் தமிழை அழிக்கத் துடிக்கும் கேடர்களிடமிருந்து நம் அன்னைத் தமிழைக் காக்க இளையத் தலைமுறையினரிடம் தமிழுணர்வையும் பற்றையும் நெஞ்சில் ஆழமாகப் பதியும் படி பரப்புங்கள். திருவைத் திருடிய திருடர்களையும் மீண்டும் நம்மிடமே கக்கும் பித்தர்களையும் அடையாளம் காட்டுங்கள். என்றுமுள தென்றமிழ் முன்னைப் பழமைக்கும் பழமையாய் பின்னைப் புதுமைக்கும் புதுமையாய் என்றென்றும் நிலைபெறட்டும். வெல்க தமிழியம்.

திருக்குறளில் பகவன் - பகவன் வட சொல்லா?


திருக்குறளில் பகவன் - பகவன் வட சொல்லா?

இரா.திருமாவளவன்

திருக்குறளில் கடவுள் வாழ்த்தில் பயிலப் பட்டுள்ள பகவன் எனும் சொல்லை பலரும் பல காலும் பல வகையிலும் ஆய்வு செய்து கருத்து கூறியுள்ளனர்.
அது தொடர்பான தெளிவினை ஏற்படுத்தும் நோக்கில் இச்சிறு கட்டுரை இங்கு வெளியிடப்படுகின்றது.

பகு எனும் அடிச்சொல்லின் அடிப்படையில் பகவன் எனும் சொல் பிறந்துள்ளது. பகு - பக- பகவு ----- பகவு + அன் = பகவன்
பகு எனின் விலக்கு என்று பொருளாகும். பிரித்தல் நீக்கல் விலக்கல் என்று மேலும் இதன் பொருளை விரிவாக்கலாம்.
இருளை விலக்கி ஒளி ஏற்படுவதால் அககாலம் பகு -- பகல் எனப் பட்டது. அப்பகலைத் தரும் கதிரவன் பகலவன் என்றும் பகல் செய் செல்வன் என்றும் அழைக்கப் பட்டது.

பகலும் பகலவனும் எப்படி உருவாகினவோ அப்படியே பவகவனும் உருவாகியது. ஒளியைத் தந்து இருளை விலக்கியதால் கதிரவன் பகலவன் எனப் பட்டது போல , அறிவை நல்கி அறியாமை இருளை அகற்றும் அறிவுடைய பெருமக்கள் பகவன் எனப் பட்டனர். பகுத்து உணர்த்தும் சான்றோன் பகவன் எனப் பட்டான்.
இது ஏற்புடைய கருத்தாகும். தமிழரின் பகவன் எனும் அருந்தமிழ்ச் சொல்லே பின்னால் வடமொழியில் திரிபுற்று பகவான் ஆகியது. எனவே பகவன் பண்டைத் தமிழ் சொல்லே என்பதை நாம் அறிதல் வேண்டும். இது வட சொல் அன்று. இது பரம்பொருளைக் காட்டும் சொல்லும் அன்று. தமிழ் அறிவனை உணர்த்தும் தூய தமிழ் சொல்லாகும்.

Monday, October 05, 2009

மலேசிய தமிழ் நெறி கழகம் செமினி தொடர்பு குழு ஏற்பாட்டில் தமிழ் நெறி - திருக்குறள் வகுப்பு அறிமுக விழா


தமிழ்த்திரு / நிறைமலி ..........................
.......................................................
தமிழரின் தொன்மைகளை அறிந்து கொள்ளவும், இழந்ததை மீட்டெடுக்கவும், இவ்வறிமுக விழாவில் கலந்து சிறப்பிக்குமாறு பணிவுடன் விழைகின்றோம்

நிகழ்வு கீழ்க்கண்டவாறு நடைபெறவுள்ளது.

திகதி : 09/10/2009
நேரம் : இரவு 7.00
இடம் : ரிஞ்சிங் தமிழ்ப்பள்ளி மண்டபம்,செமினி,சிலாங்கூர்

சிறப்பு வருகை : தமிழ்த்திரு : இரா. திருமாவளனார் (தேசியத்தலைவர், மலேசிய தமிழ் நெறிக்கழகம்)

ஏற்பாடு : மலேசிய தமிழ் நெறிக்கழகம் செமினி தொடர்பு குழு

மேல் விளத்தம் பெற: நிலவன் (தலைவர், செமினி தொடர்பு குழு)
nilavan91@yahoo.com

Saturday, October 03, 2009

அதிகாரம்: 1. கடவுள் வாழ்த்து. திருக்குறள்: 1

அதிகாரம்: 1. கடவுள் வாழ்த்து. திருக்குறள்: 1


அகர முதல எழுத்தெல்லாம் ஆதி
பகவன் முதற்றே, உலகு.


பொழிப்புரை (Meaning) :
அகரம் முதலாகத் தொடர்ந்த எழுத்துக்களெல்லாம், மூலமுதல்வனின் முதற்கண் பொருட்டே, உலகில் உள்ளது.


விரிவுரை (Explanation) :

முதற் குறளாகிய இந்தக் குறள் கடவுள் வாழ்த்து என்ற தலைப்பின் கீழ் வள்ளுவர் எழுதியிருந்தும் அனைத்து உரையாசிரியர்களும், "கடவுளைப் போற்றவே எழுத்துக்கள் உண்டாக்கப்பட்டுள்ளன" என்பதை ஏனோ, எழுத்துகளெல்லாம் அகரமாகிய எழுத்தைத் தமக்கு முதலாக உடையன; அதுபோல் உலகம் கடவுளை அடிப்படையாகக் கொண்டிருக்கிறது எனும் விளக்கத்தையே தருகின்றனர். பெரும்பாலும் அனைவரும் பரிமேலழகர் உரையினை அடியொற்றியதாகவே கருதுகின்றேன். [1]

ஆனால் வள்ளுவரின் இக்குறளில் அவ்வகையானத் தொடர்பற்ற தன்மையில் இருவரிகளும் இருப்பதையோ அல்லது இரு கருத்துக்களையும் ஒப்புமை செய்வதையோ என்னால் பார்க்க இயலவில்லை.

இருப்பினும் தெய்வம் உலகத்திற்கு முதற்றேபோலும் அகரம் எழுத்துக்களுக்கு எல்லாம் தலை என்றும் கொள்வதிலும் தவறும் இல்லை தான். ஆயின் கடவுள் வாழ்த்து என்றுச் சொல்லிய பிறகு, தெய்வத்தைத் தொழாதே எழுத்துக்களில் அகரத்தின் முதன்மையைச் சொல்லவேண்டிய அவசியம் யாது?

எனவே அகர முதல உள்ள எழுத்துக்கள் எல்லாம், ஆதி பகவன் எனும்படியான மூல முதல்வனாகிய கடவுளை முதன்மைப் படுத்தி அவரை அறியும் அல்லது வணங்கும் அல்லது வாழ்த்தும் பொருட்டே உலகில் உள்ளன அல்லது உலகில் உண்டாக்கப்பட்டன எனப் பொருள் கொள்ளலாம்.

அகர முதலிய எழுத்துக்கள் அனைத்தும் இறைவன் பால் படைக்கப்பட்டன என்பதே சரியான பொருள்.

மேலும் இது அகரத்தைத் துவங்கும் எல்லா மொழிகளுக்கும் பொருந்தும் என்பதும் உட்பொருள்.

சைவ நெறியே முதல் நெறியாக இருத்தலின் அக்கருத்துக்களை திருக்குறளில் ஒப்பீடு செய்து காட்ட முயற்சித்துள்ளேன். எனவே அவ்விதம் நோக்குங்கால்,

அகர முதல எழுத்தெல்லாம், ஆதி பகவனாகிய அரனை முதற்கண் கொண்டே உலகாயத்தம் ஆகியது என்று உறுதியுடன் சொல்லலாம்.

உலக மொழிகள் அனைத்தும் பெரும்பாலும் அகரத்திலேயே துவங்குகின்றன. அவை மனிதனின் முதல் ஒலியாகவும், அன்னையைக் குறிப்பதாகவும் கொள்கிறார்கள். தமிழில் அது அன்னையையும், அப்பனையும், அரனையும், அம்மையையும், ஓம் காரத்தின் (அஉம் ) முதல் ஒலியாகவும் முதல் எழுத்தாகவும் விளங்குகின்றது. மொழிகளின் முதல் எழுத்து அகரமாயினும், ஒவ்வொரு மொழியின் இறுதி எழுத்தும் வேறுபடுகின்றன. எனவேதான் வள்ளுவர் அகரம் முதல் தொடங்கி னகரவரையிலுமான எழுத்துக்கள் அனைத்தையும் என்று சொல்லாது அகரமுதல எழுத்தெல்லாம் என்று அனைத்து மொழிகளுக்கும் பொருந்தும்படி முதல் குறளை அமைத்துள்ளார். வள்ளுவரின் இத்தகைய நுட்பம் மிகவும் போற்றுதற்குரியது. மேலும் வள்ளுவர் முதல் குறளை தமது தாய்மொழியின் முதல் எழுத்தான அகரத்தில் துவங்கி, கடைசிக் குறளின் கடைசி எழுத்தைத் தமிழின் கடைசி எழுத்தான 'ன்' னில் முடியுமாறு அமைத்துள்ளமையால் இத்தகையவாறு மொழி எண் கணிதத்தை இலக்கியத்தில் அமைத்த வகையிலும் முன்னோடியாக விளங்குகின்றார்.

மனிதன் இயற்கையுடன் போட்டி போட்டுக் கொண்டு முன்னேறிக் கொண்டிருக்கும் காலத்தே எதையெல்லாம் வெல்ல இயாலாததோ, விளங்காததோ அவற்றை எல்லாம் இறை என்று கொண்டான். அவ்வாறே அத்தகைய இறையை அறிதலே மனிதனின் முதல் அறிவுத் தேடலாகவும் இருந்தது. எனவே மொழியின் கண்டுபிடிப்பும், கல்வியின் நோக்கமும், அறிவின் தேடலும் அனைத்தும் இறைவனை நோக்கியே இருந்தன. தனது கண்டுபிடிப்புக்களைப் பதிவு செய்து பின் வரும் சந்ததியினருக்குக் கொண்டு செல்லவே எழுத்துக்கள் தோன்றின. எனவே அத்தகைய தனது கண்டுபிடிப்புக்களையும், மூலப்பொருளாகிய இறைவனுக்கே அர்ப்பணித்துத் தங்கள் பணியைத் தொடருதல் முறைதானே.


குறிப்புரை (Message) :
அகரம் முதல் தொடங்கும் எழுத்துக்கள் எல்லாம் மூல முதல்வோனாகிய இறைவனை முன்னிறுத்தியே உலகில் உள்ளன.


அருஞ்சொற் பொருள் விளக்கம் (Synonyms) :

ஆதி:மூலம், முதல், தொடக்கம், அடிப்படை, மூத்த
பகவன்: பகுத்தவன், படைத்தவன், இறைவன், கடவுள், முதல்வன், தலைவன்
ஆதி பகவன்

மூல-முதல்வன் என்றால் வேறு கிளை முதல்வர்கள் இருக்கிறார்கள் என்று கொள்ளுதல் தவறு. அதாவது இறைவனை அனைத்திற்கும் மூத்தவராக, முதல்வராகச் சிறப்புச் செய்கிறார் என்று கொள்க.


அவையடக்கம் (Note) :

இவ்விதமாக இந்த முதல் குறளிற்கான கருத்தை நான் மட்டுமே முன்வைப்பதாக நினைக்கிறேன். இது எனக்கு முன்னோடிகளைத் தவறென்று சொல்லி எனது மேதமையைக் காட்ட நிச்ச்யம் பதிக்க வில்லை. என் கருத்திலும் தவறில்லை என்று எண்ணுவதாலும் இதுவே பொருத்தமானதாக இருக்கக் கூடுமோ என்று எண்ணுவதாலுமே பதிக்கின்றேன் என்பதைத் தன்னடக்கத்துடனும் அவையடக்கத்துடனும் தெரிவிக்கின்றேன்.


ஒப்புரை (References) :

திருமந்திரம்: 15
ஆதியு மாய்அர னாய்உட லுள்நின்ற
வேதியு மாய்விரிந்துஆர்ந்துஇருந் தான்அருள்
சோதியு மாய்ச்சுருங் காததோர் தன்மையுள்
நீதியு மாய்நித்த மாகிநின் றானே.

[1] நான் தற்சமயம் பரிமேலழகர், மணக்குடவர், மு. வரதராசனார், தேவனேயப் பாவாணர், G.U. போப், சித்தானந்த பாரதி, மு. கருணாநிதி, தமிழண்ணல், பி.எஸ். சுந்தரம் போன்றவர்களின் விளக்கங்களை ஒப்பீடு வழிகாட்டிகளாகக் கொண்டு விளக்க முயலுகின்றேன்.

Saturday, September 26, 2009

இனியத் தமிழ் ஏடு; இலவய இதழ் - புதிய உதயம்




‘உயதம்’ என்ற பெயரில் மலேசியாவில் ஒரு தமிழ் இதழ் வெளிவந்தது, உங்களுக்குத் தெரியுமா? 1970, 80களில் தமிழ் மக்களிடையே அதிகம் வாசிக்கப்பட்ட இதழ் இந்த உதயம்.

நாட்டின் மூத்த ஊடகவியலாளரும் இப்போது மக்கள் ஓசை நாளிதழின் மூத்த செய்தியாளராகவும் இருக்கும் ஐயா எம்.துரைராஜ், வழக்கறிஞர் ஐயா பொன்முகம், திரு.தேவராஜ் முதலானோர் அன்றைய உதயம் இதழின் ஆசிரியர்களாக இருந்து பணியாற்றியவர்கள்.

அரசாங்கத்தின் கருத்துப் பரப்புரை ஏடாக இருந்ததோடு அல்லாமல், தமிழுக்கும் வளம் சேர்க்கும் வகையில் நல்லதோர் இலக்கிய ஏடாகவும் உதயம் வார்த்தெடுத்தப்பட்டது – வளர்த்தெடுக்கப்பட்டது.

ஏனோ தெரியவில்லை? என்ன காரணமோ புரியவில்லை? மக்களிடையே மிகுந்த வரவேற்பைப் பெற்றிருந்த அந்த அருமை இதழ் நின்றுபோனது; அது பரப்பிய செந்தமிழ் மணம் மறைந்துபோனது. உதயத்தின் மறைவு அன்று பல்லாயிரம் மனங்களில் ஆறாத்துயரை மாறாநினைவாக விட்டுச்சென்றது – விதைத்துச் சென்றது என்பது வரலாறு.

மிக நீண்ட இடைவெளிக்குப் பிறகு இப்போது மீண்டும் உதயமாகி இருக்கிறது அந்த அரசாங்க ஏடு. மலேசியத் தகவல் திணைக்களம் (Jabatan Penerangan Malaysia) இப்போது மீண்டும் இந்த இதழை வெளியிடத் தொடங்கியிருக்கிறது. இப்போது இதன் பெயர் “புதிய உதயம்”.

முழுக்க முழுக்க தமிழில் இவ்விதழ் வெளிவருகிறது; இலவயமாக வழங்கப்படுகிறது. நான்கு வண்ணத்தில் – தரமான வழவழப்புத் தாளில் – புதியவகை அச்சமைப்பில் - மிகவும் நேர்த்தியாக – பொழிவான தோற்றத்தில் – பார்ப்போர், படிப்போர் கவனத்தையும் கருத்தையும் பட்டென கவரும் வகையில் ‘புதிய உதயம்’ வெளியிடப்படுகிறது.

முற்றிலும் புதிய தோற்றத்தில் புதுமை அமைப்பில் புதுப்புது செய்திகளைத் தாங்கி ‘புதிய உதயம்’ மீண்டும் தமிழ்மணம் பரப்ப வந்திருக்கிறது; வாராது வந்த மாமணியாய் தமிழ் மக்களின் அறிவுப்பசிக்கு நல்விருந்தாக அமைந்திருக்கிறது.

இந்த 2009இல் இதுவரை மூன்று இதழ்கள் வெளிவந்துவிட்டன. தற்போது, திருமதி பத்மா செல்வராஜு அவர்களின் பொறுப்பில் இவ்வேடு நல்லதோர் தமிழ் ஏடாக – ஏடுகளுகெல்லாம் முன்மாதிரி ஏடாக வெளிவருகின்றது.

ஆனால், இதில் வருத்தத்திற்குரிய விடயம் என்னவென்றால், இப்படியொரு இதழ் வெளிவருகிறது என்பதே இன்னும் பலரும் அறியாமல் இருக்கின்றனர்; இலவயமாக கிடைக்கும் இனியதோர் இதழைப் படிக்காமல் இருக்கின்றனர்.

‘புதிய உதயம்’ அரசுசார்ந்த செய்திகளை வழங்கும் அதே வேளையில், கல்வி, சமூகம், பொருளாதாரம், பெற்றோரியல், அறிவியல், சமயம், விளையாட்டு, சுகாதாரம், தமிழ்மொழி, தொழில்நுட்பம், சிறுகதை, கவிதை என பல்வேறு வகையான படைப்புகளைப் பாங்குடன் பரிமாறுகிறது.


தமிழ்ப்பள்ளிகள், இடைநிலை; உயர்நிலைப்பள்ளிகள், ஆசிரியர் பயிற்சிக் கழகங்கள், தமிழ்மொழிக் கழகங்கள், பொது இயக்கங்கள், பொது மக்கள் என அனைத்துத் தரப்பினருக்கும் இந்த இதழ் பயனாக அமையும் என்று உறுதியாகச் சொல்லலாம்.

குறிப்பாக, தொடக்கப்பள்ளி முதல் பல்கலைக்கழகம் வரையில் தமிழைப் பயிலும் மாணவர்களுக்கு இவ்விதழ் பெரும் நன்மையை அளிக்கும்; அவர்களின் தமிழ் வாசிப்பிற்குத் துணை நிற்கும்; தமிழ்மொழி ஆற்றலை வளர்த்தெடுக்கும். இன்னும் சொல்லப்போனால் அவர்களின் கல்விக்கும் தேர்வுக்கும்கூட துணைநூலாகப் பயன்படும்.

‘புதிய உதயம்’ இதழ் நாடு முழுவதுமுள்ள தகவல் திணைக்களம் (Jabatan Penerangan), மாவட்டத் தகவல் அலுவலகம் (Pejabat Penerangan Daerah) ஆகிய இடங்களில் இலவயமாகக் கிடைக்கும்.

பள்ளி நிருவாகங்கள், பெற்றோர் ஆசிரியர் சங்கங்கள், பொது இயக்கங்கள், இளைஞர் அமைப்புகள் ஆகிய தரப்பினர் இந்த இதழைப் பரப்பும் நல்ல பணியை விரைந்து செய்யலாம்.

இந்தச் செய்தியைப் படிக்கும் அன்பர்கள், உங்களுக்கு அருகிலுள்ள தமிழ்ப் பள்ளிகள் மாணவர்கள், ஆசிரியர்கள், பெற்றோர் ஆசிரியர் சங்கங்கள், பொது இயக்கங்கள், இளைஞர் இயக்கங்கள் ஆகியோருக்கு அன்புகூர்ந்து தெரியப்படுத்துங்கள்.


தமிழ்மக்களின் பேராதரவு இருந்தால் அரசாங்கம் வெளியிடும் இந்த இலவய இதழ்.. இனியத் தமிழ்பரப்பும் இந்த ஏடு.. எல்லாரும் படிக்கும் வகையில் பேரளவில் வெளிவரும்; மீண்டும் பாதியிலே நின்றுவிடாமல் பலகாலம் தொடர்ந்து வரும்.

‘புதிய உதயம்’ இதழ் தொடர்பாக மேல் விவரம் பெறுவதற்கு:-
திருமதி பத்மா செல்வராஜு (ஆசிரியர்)
மின்னஞ்சல்:- pathma@inform.gov.my கைப்பேசி:- 019-2808526

‘புதிய உதயம்’ முகவரி:-
Ketua Pengarang, Bahagian Penerbitan Dasar Negara,
Jabatan Penerangan Malaysia, Tingkat 12 Barat, Wisma Sime Darby,
Jalan Raja Laut, 50350 Kuala Lumpur. Tel:03-2173 4400 samb.4655

Thursday, September 24, 2009

வருகின்ற 28.09.2009 அன்று பிற்பகல் 14 மணிக்கு யெனீவா புகையிரத நிலையம் தொடக்கம் ஐநா முன்றல் வரை தொடுக்கப்படவிருக்கும் மனிதச்சங்கிலி. தமிழ் இளையோர் அமைப


விடுதலை உணர்வும் வேட்கையும் கொண்ட மதிப்புக்குரிய சுவிஸ் வாழ் தமிழ் மக்களே. எமது இனம் பாவப்பட்டவர்களாய் பரிதாவப்பட்டவர்களாய் பாதுகாப்பில்லாதவர்களாய் அனாதைகளாய் அகதிகளாய் அடிமைகளாய் சிறீ லங்கா பயங்கரவாத இனவெறி அரசால் சிதறடிக்கப்பட்டுள்ளது. உலகிலேயே மிகப்பெரும் தடுப்புமுகாம் என்று ஐனா அதிகாரிகளே வர்ணிக்கக்கூடிய மின்சாரம் பாட்சப்படுகின்ற முட்கம்பி வேலிக்கு நடுவில் எமது மக்கள் சிறைப்பிடிக்கப்பட்டு வதைகொள்ளப்படுகிறார்கள்.

அம் மக்களை விடுவிக்க வேண்டிய பாரிய பொறுப்பும் பணியும் புலம்பெயர் மக்களாகிய எம்மிடிம் தான் விடப்பட்டுள்ளது. வீரம் செறிந்த எமது விடுதலைப்போராட்டம் சந்தித்துள்ள இப் பின்னடைவானது தற்காலிகமானதே தவிர நிரந்தரமாகாது. கசப்புகளுக்கும் வெறுப்புக்களுக்கும் சோர்வுணர்வுகளுக்கும் அப்பாட் சென்று ஆயிரம் ஆயிரம் மாவீரர்களும் மக்களும் உதிரம் சிந்நி உரமேற்றிய விடுதலைப்பாதையை நாம் அனைவரும் அணி திரண்டு வருகின்ற தடைகளையெல்லாம்; உடைத்தெறிந்து முன்னோக்கி நகர்த்தவேண்டும். இன்று சிங்கள அரசாங்கமும் எமது எதிரிகளும் கண்டு பயப்படும் மாபெரும் புரட்சி கொண்ட மக்கள் சக்தியாக எமது தலைவன் எம்மை உருவாக்கியிருக்கிறார்.

ஆகவே எமது நேசத்துக்குரிய மக்களே மே 18 ஆம் திகதிக்கு முன் இருந்த எழுச்சியை விட தற்பொழுது தான் நாம் மிகவும் எழுச்சியாக இருக்க வேண்டும். மாற்றம் அடைந்துவரும் வெளிநாடுகளின் தமிழீழம் சார்ந்த நிலைப்பாட்டை எமது கனதியான போராட்டங்கள் மூலம் வலுவடையச்செய்தல் வேண்டும். இன்றைய காலகட்டம் என்பது புதிதாக போராட்டத்தில் தம்மை இணைத்துள்ள உலகெங்கும் வாழ் தமிழ் இளையோர்களுக்கு ஒரு சவாள் நிறைந்த காலகட்டம். வெளிநாட்டவர்களுக்கான அரசியல் வேலைத்திட்டங்களை முன்னெடுக்கின்ற சமபொளுதில் தமிழ் மக்களுக்கான விழிப்புணர்வையும் ஏற்படுத்துவதென்பதே அச் சவாள் ஆகும்.

இச் சாவள்களையெல்லாம் முறியடித்து இளையோர்களும் முதியோர்களுமாக சர்வ உலகமும் அதிரும் வண்ணம் கேளத சர்வதேசத்தின் காதுகள் கேட்கும்வரைக்கும் விடுதலைக்கான கொட்டொலிகளை ஓங்கி எழுப்ப வேண்டும். இன்றை இந்ந சுடுகாட்டு அமைதிக்கு ஒப்பான காலகட்டத்தை மீறி நாம் முன்னெடுக்கப்போகின்ற போராட்டங்களே தமிழனின் இருப்பை தீர்மாணிக்கப் போகின்றன அவையே அமையப்போகும் தமிழீழத் திருநாட்டின் காலத்தை வேகமாக்கப் போகின்றன.

மீண்டும் சூடுபிடிக்கத் தொடங்கியிருக்கும் வெகுசனப் போராட்டங்கள் கண்டங்கள் கடந்து பற்றியெரியும் போதே சங்கர் தொட்டு முள்ளிவாய்க்கால் வரைக்கும் மடிந்தவர்களின் ஏக்கங்கள் தணியும். சுவிஸ் தமிழ் இளையோர் அமைப்பின் எழுச்சிப்பிரகடண காலகட்டத்தில் சுவிஸ் தமிழர் பேரவையால் வருகின்ற 28.09.2009 அன்று பிற்பகல் 14 மணிக்கு யெனீவா புகையிரத நிலையம் தொடக்கம் ஐநா முன்றல் வரை தொடுக்கப்படவிருக்கும் மனிதச்சங்கிலியில் அனைவரையும் கலந்துகொள்ளுமாறு சுவிஸ் தமிழ் இளையோர் அமைப்பினராகிய உங்கள் பிள்ளைகள் உரிமையுடன் அழைக்கிறார்கள்.














வருகின்ற 28.09.2009 அன்று பிற்பகல் 14 மணிக்கு யெனீவா புகையிரத நிலையம் தொடக்கம் ஐநா முன்றல் வரை தொடுக்கப்படவிருக்கும் மனிதச்சங்கிலி. தமிழ் இளையோர் அமைப்பின் ஊடக அறிக்கை


Tuesday, September 22, 2009

ஈழ தாயின் அழுகுரல் கேட்கிறதா? ஏக்கம் புரிகிறதா?

ஈழப்போர், இறுதிப்போர், தீக்கோளங்கள் கொட்டித்தீர்த்தன. வானமே பிழந்து தீக்குண்டுகளும் வெடிமுழக்கங்களும் வன்னிமண்னை துவசம் செய்துகொண்டிருந்த நேரமது. அப்பாவி மக்களும் போராளிகளும் என்ன செய்வதென்னு புரியாமல் பின்வாங்கி பின்வாங்கி மிகக் குறுகிய ராணுவ வளையத்துள் மாட்டிக்கொண்டோம். சுரணடைந்தவர்களும் தப்பி ஓடியவர்களும் ராணுவத்தால் மனித வேட்டை நடாத்தப்பட்டுக்கொண்டிருந்தது. எங்கும் மரண ஓலம்! எங்கும் தமிழர் பிணங்கள். ஊழிகாலம் என்பார்களே அதுதான், அதேதான். ஈழத் தமிழர்களின் ஊழிகாலம். துமிழன் இரத்தமும் சதையும் வன்னிமண்ணில் சிதறிக்கிடந்தன. எத்தனையோ போர்க்கழத்தைப் படித்திரு;கலாம், பார்த்திருக்கலாம் ஆனால் இந்தக் கொடிய காட்சியை ஈழத் தமிழரைவிட யாரும் பார்த்திருக்க முடியாது.

போர் முடிந்தது. ஆனால் வேட்டுக்களின் சத்தம் ஓய்ந்தபாடில்லை. குடும்பங்கள் பிரிந்தன. உறவுகள் பிரிந்தன. எல்லோரும் தனித்தனியாய் தவித்து நின்றோம். என் கணவர் எங்கே தெரியாது, என் ஐந்து பிள்ளைகளில் மீதமுள்ள இரண்டு பிள்ளைகளைக் காணவில்லை. அவர்களை தேடிப்பார்க்கும் சூழ்நிலையும் அங்கு இல்லை. அவரவர் உயிரை அவரவர் காப்பதே கடமையாக்கப்பட்டுவிட்டது. ஆங்காங்கே கேட்கும் வேட்டுக்களுக்கு விளக்கங்கள் வெளியாகிக்கொண்டிருந்தது. ராணுவம் போராளிகள் என்று சந்தேகப்படுபவர்களை கூட்டம் கூட்டமாக அழைத்துச் சென்று சுட்டுத் தள்ளுகிறார்கள் என்ற செய்தி கேட்டு என் தலையில் இடி விழுந்தது போலானேன்.

ஏற்கனவே, போராளிகளாக மூன்று பிள்ளைகளைப் பறிகொடுத்து நிற்கும் எனக்கு அப்பாவிகளான மீதிப் பிள்ளைகளையும் பறிகொடுப்பதென்றால் எந்தத் தாயால் தாங்கிக்கொள்ள முடியும். ஆனாலும் ஒரு நப்பாசை, என் பிள்ளைகள் எங்கோ உயிருடன் இருக்கமாட்டார்களா என்று. ஆனாலும் அந்த ஆசையிலம் மண் விழுந்தது. கண்டேன் கண்டேன் அந்த ராணுவக் காடையன் என் பிள்ளைகளை அம்மணமாக்கி, கைகளை பிணைத்து, கண்களை கட்டி, குப்புறத் தள்ளி துப்பாக்கிக் குண்டுகளால் தலையை சிதறப்பண்ணி அதில் கொப்பளித்த இரத்தத்தால் எம் மண்ணே சென்னிற சேறான கொடுமையைக் கண்டேனடா. நெஞ்சு பதைத்தது, என் கருவறையே கலங்கி துடித்ததடா. நான் மட்டுமல்ல என்னைப்போல் எத்தனையோ தாய் தந்தையர் அழுது புலம்பித் தவித்தனர். என் அருகே இன்னொரு தாய் அழுகுரல்,

காவோலை நானிருக்க

குருத்தோலை சாய்ந்ததென்ன – எனக்கு

கொள்ளி போட நீயிருந்தாய் - உன்

தலையில் கொடு நெருப்பை கொட்டினரோ

அம்மா என அழைப்பாய் - ஏன்

உச்சி எல்லாம் குளிருமடா – நீ

ஊமையாய் போனாலும் மனமாறிப்போகுமடா

பிணமாய் போனாயே – உன்னை

என்ன சொல்லி நானாற

ஆண்டவன் தான் படைத்ததென்றால்

தமிழனுக்கு ஆண்டவனும் எதிரியடா

இப்போ அவனிடம் கை ஏந்த

எனக்கு தேவை ஏதும் இல்லையடா

ஒன்றுமட்டும் கேட்கலாம்

என்னையும் கொன்றுவிடு அதுபோதும்.

இப்படி ஆயிரமாயிரம் அழுகுரல். இப்படி ஒரு கொடூரம் எந்த மக்களுக்கும் எந்த நாட்டிலும் ஏற்பட்டுவிடக் கூடாது.

மிருகவதைக்கு எதிராக எத்தனை எத்தனைச் சட்டங்கள் சமூகசேவை நிறுவனங்கள் கருணை கொண்ட ஆர்வலர்கள் என உலகம் முழுவதும் உள்ள போது, ஈழத்தில் நடந்தேறும் மனித வதைகளை கண்டுகொள்ளாமல் பத்திரிகை அறிக்கையோடு கடமை முடிந்தது என நினைப்பவர்களை பார்க்கும் போது தான் வேதனையாக இருந்தது.

ஈழத்தில் தமிழன் உள்ளவரை சிறிலங்கா அரசு ஓயாது. தமிழன் ஒட்டுமொத்தமாக அழிந்தாலே ஒழிய இப்படி இன அழிப்பு தொடரும் என்பதில் யாருக்கும் ஐயப்பாடில்லை. அப்படியானால் இதற்கு தீர்வு தான் என்ன? உண்டு!

ஈழத் தமிழனே!

இனியாவது ஒன்றுபட மாட்டாயா? ஓரணியாய் திரளாயா. நீ ஒன்று சேர்ந்து ஆயுதத்தை கையிலெடு என்று சொல்லவில்லை. ஒன்றாய் சேர்ந்து சிந்தி, நிச்சயம் வழிபிறக்கும். எமது ஆரம்பம் முதல் இன்றுவரை கிடைத்த வாய்ப்புக்களை நீ கை நழுவ விட்டுவிட்டாய். அதன் விளைவதான் இப்போதைய இழிவும் அழிவும். இனியும் காலம் கடத்தி மீதித் தமிழனையும் காவுகொடுக்க காரணமாகிவிடாதே. என் மகன்களை என் மக்களை கொன்று குவித்தவனிடமே ஒரு நேர சோற்றுக்காக இந்த முட்கம்பி வேலிக்கிடையே கை ஏந்தி நிற்கிறேனடா. சுதந்திரம் கேட்டு போராடிய பிள் ளைகளை பெற்ற நான் ஒரு நேர வயிற்றுச் சோற்றுக்கு கையேந்தி அடிமையாக நிற்கிறேனடா! என்னைக் காப்பாற்று, எம் இனத்தைக் காப்பாற்று. நிம்மதியாக வாழ ஏதாவது வழியை தேடு. நீ ஆயுதத்தைக் கையாள தெரிந்த அளவுக்கு அரசியலை கையாளத் தெரிந்துகொள்ளவில்லையே. இன்றைய தோல்விக்கு இதுதான் மூலகாரணம்.

ஆயுதம்:- இது உன்னிடம் பலமாக உள்ளவரை நீயே ராஜா, நீயே மந்திரி, நீயே எல்லாமும். இது ஆயுததாரிகளுக்கு ஏற்படும் பலவீன மான பலம். ஏனென்றால் உன்னிடம் உள்ள பலமான ஆயுதத்தை விடவும் பலமிக்க ஆயுதம் எதிரியிடம் சென்றுவிட்டால், அவன் பலசாலியாகிவிடுவான் நீ அடிமையாக்கப்பட்டுவிடுவாய் என்பதை நீ ஏன் உணர மறுத்தாய். நீ ஆயுதத்தில் பலமாக உள்ளபோதே அரசியல் தீர்வுக்கான வழிமுறைகளை முன்னெடுக்காததே இன்றைய அவலத்திற்கு உண்மையான காரணம்.

யுத்தத்தை நிறுத்துவதற்காக பேச்சுவார்த்தையில் ஈடுபட்டபோதே தீர்வுக்கான முன்னெடுப்புகளை நீ முன்னெடுக்கத் தவறிவிட்டாய். உன் சகோதரர்களையும் அயலவர்களையும் உனக்கு எதிரியாக்கிக்கொண்டதும் அல்லாமல் அவர்களை எதிரிக்கு நண்பர்களாக்கிவிட்டது உனது அபரிமிதமான ஆயுத நம்பிக்கை.

முடிந்தவை முடிந்தவையாக இருக்கட்டும் இனி நடப்பவையாவது நல்லவையாக தொடர சிந்தித்து செயல்படு. முதலில் ஈழத்தமிழனே ஒன்றுபடு! தோழ் கொடுக்கும் தோழனாய் உணர்வோடு ஒன்றுபட்டு சிந்தித்து செயல்படு வெற்றி கிட்டும். தோழ் கொடுக்க தோழர்கள் உண்டு தளர்ந்துவிடாதே, ஆதரவு தர இரத்த உறவு, அயலவர்கள் உண்டு! எழுந்து நில் உன்னால் முடியும் ஈழத் தமிழனே உன்னால் முடியும்.

எம் தாய் தமிழ் நாடே!

எமக்கொரு துன்பம் என்றால் உண்மையான உணர்வோடும் துடிப்போடும் களமிறங்கிப் போராடும் எம் இரத்த உறவுகளே, ஈழத் தமிழன் நிம்மதி பெருமூச்சு விட முடியும் என்றால், அதற்கு பெரும் பங்கு உங்களிடம்தான் உள்ளது. உங்களை நம்பித்தான் உலகத் தமிழர்கள் எல்லாம் ஏக்கப்பார்வையோடு காத்திருக்கின்றனர். உங்களுக்கு அறிவு கூறும் அளவுக்கு நான் அரசியல் அறிவு உள்ளவள் அல்ல. மனதிலுள்ள ஏக்கத்தின் வெளிப்பாடாகவே இதை கூறுகிறேன். எம் இளைஞர்களின் இந்த நிலைக்கு காரணம் சகோதரப்படுகொலை என்பதை யாரும் புறம் தள்ளிவிட முடியாது. அதேபோல் மிகுந் த அரசியல் சாணக்கியமும் உண்மையான உணர்வும் கொண்ட தமிழ்நாட்டின் தலைவர்கள் இருந்தும் ஈழத்தில் நடந்து முடிந்த பேரழிவையும் நடந்துகொண்டிருக்கும் தமிழர் அழிப்புகளையும் தடுக்க முடியவில்லையென்றால் அதற்கு உண்மையான காரணம், தாங்கள் ஒன்றுபடாமல் தனித் தனி க் கட் சிகளாக போராட்டம் நடாத்தியதே.

தமிழரைக் காக்க தமிழன் என்கிற ஒரு குடையின் கீழ் ஒன்றுபட்டு போராடாததே மத்திய அரசு செவிசாய்க்காததற்கு காரணம். நாம் வாழ்வில் ஒரு காலும் சாவில் ஒரு காலுமாக பேதலித்து நிற்கிறோம். எம்மைக் காப்பாற்றி வாழவைப்பீர்கள் என்று இன்னமும் முழுமனதுடன் நம்புகிறோம். மரணத்தறுவாயிலும் உங்கள் கைகள் உயராதா ஒன்றுபட்டு உயராதா என்கிற ஏக்கத்தோடு பார்த்துக் காத்துநிற்கிறோம். தங்களின் மேலான அரசியல் கொள்கைகளை ஒருபுறம் ஒதுக்கிவைத்துவிட்டு, ஈழத் தமிழர்களைக் காக்க தா ங்கள் மேற்கொள்ளும் பெரும் அற்பணிப்பாக அரசியல் வேறுபாடுகளை ஒதுக்கிவைத்துவிட்டு ஒன்றுபட்டு எம்மை காக்க வழிசெய்யுங்கள். உங்களால் முடியும். உங்களால் மட்டும்தான் ஈழத்தமிழனுக்கு விடிவு பிறக்கும் என்ற நம்பிக்கையோடு காத்திருக்கும் ஈழத் தாய்.

Monday, September 21, 2009

எனக்கு முடிவு கட்ட பழ.நெடுமாறன் கோஷ்டியினர் சதி :கொலைஞர்

இலங்கைத் தமிழர் விஷயத்தில் முதல்வரின் செயல்பாடுகள் உலகம் முழுவதும் உள்ள தமிழர்கள் இடையே கோபத்தையும், வெறுப்பையும் ஏற்படுத்தியுள்ளது.
3.50 லட்சம் தமிழர்கள் படும் துன்பத்திற்கு ராஜபட்ச மட்டும் காரணம் அல்ல; பிரதமர் மன்மோகன் சிங்கும், முதல்வர் கருணாநிதியும்தான் காரணம் என்று இலங்கை தமிழர்கள் பாதுகாப்பு இயக்கத்தின் ஒருங்கிணைப்பாளர் பழ.நெடுமாறன் கூறியுள்ளார்.

இது குறித்து இலங்கைத் தமிழர்கள் பிரச்னையில், முதல்வரின் செயல்பாடுகள் குறித்து வெளிநாடு வாழ் தமிழர்கள் அதிருப்தி அடைந்திருப்பதாக பழ.நெடுமாறன் தெரிவித்துள்ளாரே? என்ற கேள்விக்கு பதிலளித்த முதல்வர்,

’’நெடுமாறன் கோஷ்டியினரின் உள்நோக்கத்தை என்னால் புரிந்துகொள்ள முடிந்தது.

உண்மைக்கு மாறான தகவல்கள், நெடுமாறன் மூலம் வெளியிடப்பட்டிருக்கின்றன. எனக்கு ஒரு முடிவு கட்ட திட்டமிட்டு, அந்தப் பழியை உலகத் தமிழர்கள் யார் மீதாவது போட்டு விட்டு, தாங்கள் தப்பித்துக்கொள்ள, அந்தக் கோஷ்டியினர் முன்கூட்டியே திட்டமிட்டு செய்யும் பிரச்சாரம் என்று நான் கருத வேண்டியிருக்கிறது.

நெடுமாறன் போன்றவர்களுக்கு, ஜெயலலிதாவின் செயல்பாடுகள் தான் பிடிக்கும். ஜெயலலிதாவைப் போல், அவரைப் பிடித்து குண்டர் சட்டத்திலோ அல்லது பொடா சட்டத்திலோ மாதக் கணக்கில் சிறையில் தள்ளினால், அதுதான் சிறந்த நடவடிக்கை என்பர்.

எப்படியிருந்தாலும், 'வீழ்வது நாமாக இருப்பினும், வாழ்வது தமிழாக இருக்கட்டும்' என்பதில் நான் உறுதியாக இருக்கிறேன்’’ என்று கூறியுள்ளார்.

செய்தி : முகபுத்தகம்(பெச்பூக்) நந்தா தமிழ்

தமிழ்ச் செம்மொழிக்கு இருக்கின்ற 11 தகுதிகள்

1.தொன்மை (Antiquity)
2.தனித்தன்மை (Individuality)
3.பொதுமைப் பண்பு (Common Characters)
4.நடுவு நிலைமை (Neutrality)
5.தாய்மைத் தன்மை (Parental Kinship)
6.பண்பாடு, கலை, பட்டறிவு வெளிப்பாடு (Finding expression in the culture art and life experiences of the civilized society)
7.பிறமொழிக் கலப்பில்லாத் தனித்தன்மை (Ability to function independently without any impact or influence of any other language and literature)
8.இலக்கிய வளம் (Literary prowess)
9.உயர்சிந்தனை (Noble ideas and ideals)
10.கலை, இலக்கியத் தனித்தன்மை வெளிப்பாடு (Originality in artistic and literary expressions)
11.மொழிக் கோட்பாடு (Linguitik principles)



செம்மொழி என்றால் அனைத்து வகையாலும் செம்மையாக அமைந்த மொழி என்று பொருள்படும். இதனை ஆங்கிலத்தில் Classical Language என்பர். செம்மொழி என்பது மிகத் தொன்மையும் நீண்ட நெடிய வரலாறுப் பின்னணியும் கொண்டதாக இருக்கும் என்பது பொதுவான கருத்து. அந்த வகையில், உலகின் உலகின் தொன்மை மொழிகளாக ஆறு மொழிகளை ஐக்கிய நாடுகள் நிறுவனத்தின் 'யுனெசுக்கோ' அறிவித்துள்ளது. அவை, தமிழ், சமற்கிருதம், சீனம், இலத்தீனம், கிரேக்கம், இப்ரூ ஆகியன.

இவற்றுள், சமற்கிருதம் பேச்சு மொழியாக இல்லை; 'மந்திரங்கள்' என்ற உருவில் மட்டுமே இருக்கிறது. இலத்தீன், இப்ரூ மொழிகள் வழக்கொழிந்துவிட்டது. இசுரேலிய அரசு ஏசுபிரான் பேசிய இப்ரூ மொழிக்கு மீண்டும் உயிரூட்டி வருகிறது. கிரேக்க மொழியும் கிட்டதட்ட அழிவின் எல்லையைத் தொட்டுவிட்டு இப்போது மறுவாழ்வு பெற்று வருகிறது. சீன மொழியோ பட எழுத்து அமைப்பில் அமைந்தது. ஆதலால், மாந்த உள்ளுணர்வுகளை சீன மொழியால் மிகத் துள்ளியமாக வெளிப்படுத்த முடியாது என்பது மொழியறிஞர்கள் கருத்து.

ஆனால், சிறந்த இலக்கிய வளம், செம்மாந்த இலக்கண அரண், செறிவான விழுமியம், பொதுமை மரபு, உயரிய சிந்தனை, பாரிய சொல்வளம், வரலாற்றுப் பின்னணி, தனித்தியங்கும் மாண்பு, அழிவில்லா வாழ்வு, காலத்திற்கேற்ற புதுமை என பல வகையிலும் சிறப்புபெற்றிருக்கும் ஒரே மொழி...

அன்று தாம் வாழ்ந்த காலத்தில் பிறமொழிகளோடு வளமாக வாழ்ந்து; இன்று தன்னோடு வாழ்ந்த மொழிகள் பல அழிந்த பின்பும்கூட இன்னும் வளத்தோடு வாழுகின்ற ஒரே மொழி... நம்முடைய தமிழ்மொழிதான்!

தமிழ்ச் செம்மொழியின் தகுதிகள்

ஒரு மொழியைச் செம்மொழியாக ஏற்றுக்கொள்ள வேண்டுமெனில் அதற்கு பதினொரு (11) தகுதிப்பாடுகள் இருக்க வேண்டும் என்று மொழியியல் வல்லுநர்கள் வரையறை செய்துள்ளனர். இந்தப் 11 தகுதிப்பாடுகளையும் உருவாக்கியவர்கள் மேலை நாட்டு மொழி அறிஞர்கள் என்பது குறிப்பிடத்தக்கது.

உலகில் பழம்பெரும் மொழிகளாக அடையாளம் காணப்பட்டுள்ள எந்த ஒரு மொழிக்கும் செம்மொழிக்குரிய 11 தகுதிகளும் முழுமையாக இல்லை. சமற்கிருதத்திற்கு 7 தகுதிகளும், இலத்தின், கிரேக்க மொழிகளுக்கு 8 தகுதிகளும் மட்டுமே உள்ளன என்பது அறிஞர்கள் கூற்று.

ஆனால், என்ன ஒரு வியப்பு என்றால், நம் அன்னைத் தமிழுக்கு மட்டுமே செம்மொழித் தகுதிப்பாடுகள் பதினொன்றும் முழுமையாக உள்ளது. மேல்நாட்டு வல்லுநர்கள் வகுத்த மொழித் தகுதிப்பாட்டுக்கு நம்முடைய தமிழ்மொழி முற்றும் முழுவதுமாக ஒத்துப் போவது மிகப்பெரிய வரலாற்று உண்மையாகும்.

இனி, தமிழ்ச் செம்மொழிக்கு இருக்கின்ற அந்தப் 11 தகுதிகளைக் காண்போம்:-

1.தொன்மை (Antiquity)
2.தனித்தன்மை (Individuality)
3.பொதுமைப் பண்பு (Common Characters)
4.நடுவு நிலைமை (Neutrality)
5.தாய்மைத் தன்மை (Parental Kinship)
6.பண்பாடு, கலை, பட்டறிவு வெளிப்பாடு (Finding expression in the culture art and life experiences of the civilized society)
7.பிறமொழிக் கலப்பில்லாத் தனித்தன்மை (Ability to function independently without any impact or influence of any other language and literature)
8.இலக்கிய வளம் (Literary prowess)
9.உயர்சிந்தனை (Noble ideas and ideals)
10.கலை, இலக்கியத் தனித்தன்மை வெளிப்பாடு (Originality in artistic and literary expressions)
11.மொழிக் கோட்பாடு (Linguitik principles)

இப்படி 11 தகுதிகளும் முழுமையாக பெற்றுள்ள தமிழ் மொழியைத் தாய்மொழியாகப் பெற்றதற்காக ஒவ்வொரு தமிழரும் பெருமையும் பீடும் கொள்ள வேண்டும். மொழியின் பெருமையை; வரலாற்றை; பாரம்பரியத்தை அறிந்து உணர்ந்துகொண்டால் தமிழர்கள் உலக இனங்களுக்கு இணையாக நிமிர்ந்து நிற்க முடியும் என்பது திண்ணம்.
தனித்த விழுமியங்களோடு உலகில் உய்வதற்கும் வாழ்வில் உயர்வதற்கும் தமிழர்களுக்குப் பெரும் தன்னம்பிக்கையத் தரவல்லது தமிழ்மொழி ஒன்றே. தமிழை முன்னெடுத்தால் ஒழிய தமிழர் வாழ்வு வளம் பெறாது. தமிழே தமிழரின் முகவரி என்பதை ஒவ்வொரு தமிழரும் உணர்ந்து தெளிய வேண்டும்.

Sunday, September 20, 2009

தடைகளை உடைப்போம் Mass protest planned in Germany.

** GERMAN members only! **

தடைகளை உடைப்போம்
Mass protest planned in Germany.

Date: 27/09/09, Sunday
Time: 10.30am
Venue: Landtag NRW Duesseldorf

For more info click on the following links!

http://www.youtube.com/watch?v=0QabPOVh_dQ&feature=player_embedded

http://www.facebook.com/event.php?eid=163938179497&ref=mf

We Tamils have to gather as one and show the world that we haven't given up on our Eelam struggle !!

தமிழரின் தாகம் தமிழீழத் தாயகம்! ♥
சுஜாதாவின் சிறுகதைகள் பதிவிறக்க (Download)
சுஜாதாவின் சிறுகதைகள் பதிவிறக்க (Download)

சுஜாதா (மே 3, 1935 - பெப்ரவரி 27, 2008) தமிழகத்தின் குறிப்பிடத்தக்க எழுத்தாளர்களில் ஒருவராவார். இயற்பெயர் ரங்கராஜன். தனது தனிப்பட்ட கற்பனை மற்றும் நடையால் அவர் பல வாசக ர்களை கவர்ந்துள்ளார். சுஜாதாவின் முதல் கதை 1953 ஆம் ஆண்டு சிவாஜி என்ற பத்திரிக்கையில் வெளிவந்தது. சிறுகதைகள், நாவல்கள், நாடகங்கள், அறிவியல் நூல்கள், கவிதைகள், கட்டுரைகள், திரைப்பட கதை-வசனங்கள், தொலைக்காட்சி நாடகங்கள் என பல துறைகளில் தன் முத்திரையினைப் பதித்தவர் சுஜாதா.

Saturday, September 19, 2009

ஆறாவது உலகத் தமிழர் ஒற்றுமை மாநாடு

இடம்: கோலாலம்பூர் மலேசியா
காலம்: புரட்டாதி 9, 10, 12 ( September 25, 26 and 27 th 2009)



முழுமையான விபரங்களை பார்க்க இணைப்பில் சொடுக்கவும்
ஆறாவது உலகத் தமிழர் ஒற்றுமை மாநாடு

Friday, September 18, 2009

1மலேசியா வலைப்பதிவில் தமிழ்:- மாண்புமிகு பிரதமருக்கு நன்றிமடல்

மதிப்பிற்கும் மாண்பிற்கும் உரிய,
மலேசியப் பிரதமர் டத்தோஸ்ரீ நஜிப் துன் இரசாக் அவர்களே,

‘ஒரே மலேசியா’ என்ற உயரிய கோட்பாட்டினைப் பெருமையோடு மதித்துப் போற்றும் மலேசிய மக்களில் ஒருவனாக, மிகுந்த நெகிழ்ச்சியோடும் நன்றி உணர்ச்சியோடும் இந்த மடலை எழுதுகின்றேன்.

என்னுடைய மன நெகிழ்ச்சிக்கான காரணத்தை முதலில் தங்களுக்குச் சொல்லக் கடமைப்பட்டுள்ளேன்.

இன்று (16.9.2009), மலேசியா உருவாக்கம் பெற்ற 46ஆம் ஆண்டு வரலாற்று நாள். சபா, சரவா ஆகிய இரு மாநிலங்களும் இணைக்கப்பட்டு மலாயா என இருந்த நம் நாடு மலேசியாவாக உருப்பெற்ற வரலாற்றுச் சிறப்புமிக்க நாள். மலேசியர்கள் அனைவரும் பெருமையுடன் நினைத்துப்பார்க்க வேண்டிய ஒற்றுமைத் திருநாள்.

இதே நாளை, மலேசியாவின் இன்னுமொரு வரலாற்றுச் சிறப்புமிக்க நாளாகத்தான் நான் இப்போது பார்க்கிறேன்.

ஆம், டத்தோஸ்ரீ அவர்களே,
இன்றுதான், தங்களின் ஒரே மலேசியா வலைப்பதிவு முதன்முறையாக எங்கள் அழகுதமிழில் உலாவர தொடங்கியிருக்கிறது. ஒரே மலேசியா வலைப்பதிவில் ஓங்குபுகழ் தமிழுக்கும் அரியணை கிடைத்திருக்கிறது; ஆங்கிலம், மலாய், சீனம் ஆகிய மொழிகளில் மட்டுமே இயங்கிய ஒரே மலேசியா வலைப்பதிவு இன்றுதொடங்கி எங்கள் அன்னைமொழியாம் அழகார்ந்த செந்தமிழ் பேசுகிறது. அதைக்கண்டு, எங்கள் உள்ளமெல்லாம் சிலிர்க்கிறது; மகிழ்ச்சி.. மகிழ்ச்சி என ஆர்ப்பரிக்கிறது.

மாண்புமிகு டத்தோஸ்ரீ அவர்களே,
தாங்கள் அறிமுகப்படுத்திய ஒரே மலேசியா கொள்கையில் இதுவோர் முகமையான விடயமாகும். தொடக்கத்தில் ஒரே மலேசியா வலைப்பதிவில் தமிழ்மொழி இல்லாததைக் கண்டு மலேசியத் தமிழர்கள் கொஞ்சம் துணுக்குற்றுப் போயினர். இன்னும் சொல்லப்போனால், அதிர்ச்சியும் அடந்திருந்தனர்.

தமிழ் மக்களின் இந்த மனக்குறை தமிழ் நாளிகைகள், தமிழ் வலைப்பதிவுகள் முதலானவற்றின் வழியாக தங்கள் மேலான பார்வைக்கு முன்வைக்கப்பட்டது. இதற்கோர் நல்ல தீர்வைச் தாங்கள் கண்டிப்பாகச் செய்வீர்கள் என மிகவும் எதிர்பார்க்கப்பட்டது.

ஒரே மலேசியா வலைப்பதிவில் தமிழுக்கும் இடம்வேண்டும் என்கிற தமிழ் மக்களின் எதிர்பார்ப்பைப் புரிந்துகொண்டு இப்போது எங்கள் இன்னுயிர்த் தமிழையும் இணைத்துக் கொண்டிருப்பதைக் கண்டு மகிழ்வும் பெருமையும் எய்துகின்றோம்.

எங்களின் உணர்வுகளுக்கும் நம்பிக்கைக்கும் மதிப்பளிக்கும் வகையில் தாங்கள் செய்திருக்கும் இந்த மேன்மையான செயலைக் கண்டு, தங்களுக்கு இருகரம்கூப்பி நன்றி சொல்வதைக் கடமையாகவும் கட்டயமாகவும் கொள்கின்றோம்.

மலேசியப் பிரதமராகிய தங்களின் வலைப்பதிவில், நாட்டின் மற்றைய மொழிகளுக்கு இணையாக தமிழையும் இடம்பெறச் செய்திருப்பதை எங்கள் தமிழ்கூறு நல்லுலகம் ஒரு வரலாற்றுச் சாதனையாகவே பதிவுசெய்துகொள்ளும் என நம்புகிறேன்.

மாண்புமிகு டத்தோஸ்ரீ அவர்களே,
இனி, தங்களின் சீரிய சிந்தனைகளும் ஏற்றமிகு ஏடல்களும் எங்களுக்கு இனியத் தமிழ் வழியிலேயே கிடைக்கப்பெறும். அவற்றை ஆழந்து உணர்ந்துகொண்டு தங்களின் வழிகாட்டுதலில் செயல்படுவதற்கு அணியமாக இருக்கின்றோம் என்பதைத் தெரிவிக்க விழைகிறேன்.

இறுதியாக, தமிழ் மக்களின் உள்ளத்துக்கு மிக நெறுக்கத்தில் இருக்கும் தமிழுக்கு ஒரே மலேசியா வலைப்பதிவில் இடம்கொடுத்ததன் பயனாகத் தாங்கள் தமிழ் மக்களின் உள்ளங்களில் நீங்கா இடத்தைப் பிடித்திருக்கிறீர்கள் என்று சொன்னால் மிகையில்லை. இதுபோலவே, எங்கள் மக்கள் உள்ளங்களில் இன்னும் தேங்கிக்கிடக்கும் பல்வேறு குறைபாடுகளுக்கும் குழப்பங்களுக்கும் படிப்படியாகத் தீர்வுகளைக் கண்டு தமிழர்கள் வாழ்வில் நம்பிக்கை ஒளி ஏற்றிவைப்பீர்கள் என மனதார நம்புகிறேன். மீண்டும் நெஞ்சார்ந்த நன்றியினைச் சொல்லி விடைபெறுகிறேன்.

நன்றி, வணக்கம்.

அன்புடன்,
மலேசியத் தமிழர்கள் சார்பில்,
திருத்தமிழ் ஊழியன்,
சுப.நற்குணன்.

தொடர்பான செய்தி:-
1மலேசியா வலைப்பதிவு: மாண்புமிகு பிரதமருக்கு ஓர் அன்புமடல்.

பி.கு:- மாண்புமிகு பிரதமருக்கு நன்றி சொல்ல வேண்டியது தமிழர் அனைவருடைய கடமையாகும். உங்கள் நன்றியறிதலைத் தெரிவிக்க இங்கே சொடுக்கவும்.

ஒரே மலேசியா வலைப்பதிவைத் தமிழில் படிக்க

இங்கே சொடுக்கவும்

Friday, September 04, 2009

ரத்தவெறிபிடித்த சிங்களர்களால் சிதைக்கப்பட்டிருக்கும் ஈழத்தமிழர்கள்: மீண்டும் அதிர்ச்சியூட்டும் படங்கள்

e4இலங்கையில் உள்ள ராணுவ வதை முகாமில் தமிழ் இளைஞர்களை கடத்திச் சென்று நிர்வானமாக்கி, தலையில் சுடும் காட்சிகளை லண்டனில் உள்ள சேனல் 4 தொலைக்காட்சி நிறுவனம் வெளியிட்டது.

இந்நிலையில் இலங்கை இராணுவம் ஈழத்தமிழர்களை கொன்று பெண்களையும் இளைஞர்களையும் முழுநிர்வாணமாக்கி புகைப்படங்களை எடுத்திருக்கும் அதிர்ச்சியூட்டும் புகைப்படங்கள் வெளியாகியுள்ளன.

இப்படங்கள் எப்போது எடுக்கப்பட்டது எனத் தெரியவில்லை. விமான ஓடுபாதையில் இப் புகைப்படங்கள் எடுக்கப்பட்டிருக்கலாம் எனச் சந்தேகம் எழுந்துள்ளது.

இது அனுராதபுரம் வான் தாக்குதலாக இருக்கலாம் எனக் கூறப்படுகிறது. இறந்த போராளியின் மீது தனது பூட்ஸ் காலை வைத்து இலங்கை இராணுவம் புகைப்படம் எடுத்துள்ளது.

இறந்தவர்களுக்கு மரியாதை செலுத்தவேண்டாம். ஒரு குழிக்குள்ளாவது போட்டு புதைத்திருக்கலாம். அப்படி செய்யாமல் காக்கா,குருவி கொத்தித்தின்ன அப்படியே போட்டு வைத்திருக்கிறார்கள்.

ஆனால் இறந்த உடலத்தை நிர்வானமாக்கிப் பார்க்கும் சாக்கடைப் புத்தி உலகிலேயே சிங்கள இனத்திற்கு மட்டும் தான் இருக்கும் என்று ஈழ ஆதரவாளர்கள் கொந்தளிக்கிறார்கள்.

விடுதலைப் புலிகளுக்கு யப்பான் நீர்மூழ்கி கப்பல் அமைக்க உதவி

2004 ஆம் ஆண்டு டிசம்பர் மாதம் ஆழிப்பேரலையினால் ஏற்பட்ட பேரழிவைத் தொடர்ந்து தமிழீழ விடுதலைப் புலிகளின் கட்டுப்பாட்டில் இருந்த பகுதிகளுக்குச் செல்வதற்கு அனுமதிக்கப்பட்ட ஜப்பானிய நிபுணர்களின் குழு ஒன்றே நீர்மூழ்கிக் கப்பல்களைப் பயன்படுத்துவதற்கான சுரங்கப்பாதை ஒன்றைக் கட்டியமைப்பதற்கான உதவிகளைச் செய்தது என கொழும்பில் இருந்து வெளிவரும் ஆங்கில நாளேடு ஒன்று இன்று செய்தி வெளியிட்டுள்ளது.

Wednesday, August 26, 2009

பறிபோவது இந்திய ஆய்வியல் துறையா? நமது இனத்தின் மானமா?



மலாயாப் பல்கலைக்கழக இந்திய ஆய்வியல் துறையில் ஏற்பட்டுள்ள பனிப்போர் – பதவிப்போர் இன்று எல்லாருடைய கவனத்தையும் ஈர்த்துள்ளது. அதுமட்டுமா? தமிழர்களின் அடிவயிற்றில் புளியைக் கரைத்துக் கொண்டிருக்கிறது!

அங்கே ஏற்பட்டுள்ள உட்பகையின் காரணமாக, இந்திய ஆய்வியல் துறையே பறிபோகும் நிலைமை ஏற்பட்டிருக்கிறது. என்றுமே இல்லாத ஒன்றாக, இப்போது அத்துறைக்கு தமிழரல்லாத ஒருவர் தலைவராக நியமிக்கப்படுள்ளார். இதனினும் கொடுமை, ‘இந்திய ஆய்வியல் துறை’ என்ற பெயர் நீக்கப்பட்டு தென்னாசிய ஆய்வியல் துறை என்று மாற்றப்படவுள்ளதாகத் தகவல் கசிந்திருகின்றது.

இந்த நிலையில், “இந்திய ஆய்வியல் துறை நிலைநிறுத்தப்பட வேண்டும்; அதன் தலைவராக ஒரு தமிழரே நியமிக்கப்பட வேண்டும்” எனப் பொது இயக்கங்கள் குரல் கொடுக்கத் தொடங்கியுள்ளன. இந்த இழுபறிக்கு என்ன விடிவு? எதுதான் முடிவு?

சரி, அதற்கென்ன இப்போது என்கிறீர்களா?

மலேசியத் தமிழருக்கும் தமிழுக்கும் உரிமையாக இருக்கின்ற இந்திய ஆய்வியல் துறைக்கு வாழ்வா? சாவா? என்கிற விளிம்பில் நின்றுகொண்டு, அதன் வரலாற்றைச் சற்றுத் திரும்பிப் பார்க்கிறது இந்தப் பதிவு! இன்றைய இளையோருக்கு நேற்றை நிகழ்வுகளைத் தூசுதட்டித் தருகிறது இந்த இடுகை! தொடந்து படிக்க உங்களை அன்புடன் அழைக்கிறேன்.


மலாயாப் பல்கலைக்கழகத்தில் தமிழுக்கென்று தனியாக ஒரு துறை செயல்படுவது என்பது பெரிய போராட்டத்தின் வழியாகக் கிடைத்த மாபெரும் வெற்றியாகும். இந்த வரலாற்றுச் சுவடுகள் மறைந்துபோனதால் தானோ என்னவோ, இன்றையத் தமிழர்களிடம் மொழிமானமும் இனமானமும் மழுங்கிப்போய்விட்டது போலும்!

சிங்கப்பூரில் செயல்பட்ட ஏழாம் கிங் எட்வர்டு (King Edward VII-1905) மருத்துவக் கல்லூரியும் இராபில்சு கல்லூரியும் (Raffles College-1929) இணைத்து, அத்தோபர் மாதம் 8ஆம் நாள் 1949ஆம் ஆண்டில் சிங்கையில் உருவாக்கப்பட்டதுதான் மலாயாப் பல்கலைக்கழகம்.

அதில், தமிழ்த்துறையை ஏற்படுத்துவதற்கு அன்றைய மலாயா, சிங்கைத் தமிழர்கள் எழுச்சியுடன் போராடினர். இந்தப் போராட்டத்தை அமரர் தமிழவேள் கோ.சாரங்கபாணி (கோ.சா) அவர்களின் ‘தமிழ் முரசு நாளேடு’ முன்னெடுத்து நடத்தியது. அதற்காக அன்றையத் தமிழர்கள் பெரும் அளவில் ஆதரவையும் நிதியையும் திரட்டிக் கொடுத்தனர்.

இதன் விளைவாக, 1956ஆம் ஆண்டில் மலாயாப் பல்கலைக்கழகத்தில் இந்திய ஆய்வியல் துறை நிறுவப்பட்டது. பின்னர், 1959இல் மலாயாப் பல்கலைக்கழகம் கோலாலம்பூருக்கு இடம் மாறி வந்தது.

தொடக்கத்தில், தமிழ்த் துறை நிறுவப்பட்டபோது அதற்கு தகவுரைகள் (ஆலோசனை) வழங்க, இந்தியாவிலிருந்து நீலகண்ட சாத்திரியார் (Neelakanda Shasthri) மலாயா வந்தார். தமிழுக்காக உருவாக்கப்பட்ட துறையில் பயிற்றுமொழியாக ‘சமற்கிருதத்தை’ (Sanskrit) வைக்க வேண்டும் என அவர் பரிந்துரை செய்தார்.

இந்தப் பரிந்துரைக்கு எதிராகப் போராட்டம் வெடித்தது. பெரும்பான்மைத் தமிழர்களிடமிருந்து மாபெரும் எதிர்ப்பு அலை கிளம்பியது. மீண்டும் ‘தமிழ் முரசு’ நாளிகையின் வழியாக அமரர் கோ.சாரங்கபாணி களமிறங்கினார். அதோடு, காராக்கு(Karak) அகில மலாயாத் தமிழர் சங்கம் முதலிய தமிழ் அமைப்புகள் கல்வி அமைச்சுக்கு நேரடியாகச் சென்று கோரிக்கை மனுவைக் கையளித்தன.
  • தமிழ் மக்களின் ஒன்றுபட்ட எழுச்சியின் வாயிலாக அரசாங்கத்தால் தமிழ் ஏற்றுக்கொள்ளப்பட்டது; பயிற்றுமொழியாகத் ‘தமிழ்’ அரியணையில் அமர்த்தப்பட்டது.


இந்த மகிழ்ச்சியான செய்தியைப் “பல்கலைக்கழகத்தில் தமிழுக்கே முதன்மை” என்று சிங்கை தமிழ் முரசு முதல் பக்கத்தில் வெளியிட்டது. இந்தச் செய்தியால் ஒட்டுமொத்தத் தமிழர்கள் அனைவரும் மகிழ்ச்சி வெள்ளத்தில் மூழ்கினர்.

இதோடு போராட்டம் ஓய்ந்ததா என்றால், இல்லை! தமிழுக்காக உருவாக்கப்பட்ட துறையில் தமிழ் நூலகம் அமைப்பதற்கு இன்னொரு எழுச்சி இயக்கம் முன்னெடுக்கப்பட்டது. அதே தமிழ் முரசு மூலம் அமரர் கோ.சா ‘தமிழ் எங்கள் உயிர்’ எனும் முழக்கத்தோடு நிதி திரட்டும் இயக்கத்தைத் தொடங்கினார். இந்த நிதிக்கு ஒவ்வொரு தமிழரும் ஆளுக்கு ஒரு வெள்ளி தரவேண்டும் என வலியுறுத்தினார்.

அமரர் கோ.சா.வின் வேண்டுகையை ஏற்று மொழி உணர்வும் இன உணர்ச்சியும் கொண்ட மலாயாத் தமிழர்கள், நாடு முழுவதும் நிதியைத் திரட்டிக் கொடுத்தனர். இந்த முயச்சிக்கு ஆதரவாக அகில மலாயா தமிழர் சங்கம், தோட்டத் தொழிற்சங்கங்கள், தமிழாசிரியர்கள், இளைஞர்கள் என அனைத்துத் தரப்பினரும் நிதி வழங்கினர். இப்படியாகத் திரட்டப்பட்ட பெரும் நிதியைக் கொண்டு மலாயாப் பல்கலைக்கழகத்தில் தமிழ் நூலகம் வெற்றியோடு உருவாக்கப்பட்டது.
*(இன்றும்கூட நம் நாட்டில் இயங்கும் மிகப்பெரிய நூலகம் என்ற சிறப்பைப் பெற்றது மலாயாப் பல்கலைக்கழகத் தமிழ் நூலகம்தான்.)

இத்தனைக்கும் இடையில், தமிழ்த்துறையில் படிப்பதற்கு மாணவர்களைச் சேர்க்கும் பணியும் நடந்தது. அன்று நாடுதழுவிய நிலையில் நடைபெற்ற தமிழர் திருநாள் விழாக்களில் பரப்புரைகள் மேற்கொள்ளப்பட்டன. தமிழ்த்துறையில் மாணவர்கள் குறையும் போதெல்லாம் தமிழர் சார்ந்த இயக்கங்களின் அன்றையத் தலைவர்கள் ‘பல்கலைக்கழத்தில் தமிழை ஒரு பாடமாகப் படிக்க வேண்டும்’ என்று ஊர்கள்தோறும், தோட்டங்கள் தோறும் இளைஞர்களுக்கு ஊக்கமூட்டி உற்சாகப்படுத்தினர்.

அன்று தொடங்கி இன்று வரையில் மலாயாப் பல்கலைகழகத்தில் ஆயிரக்கணக்கில் மாணவர்கள் சேர்ந்து தமிழை முதன்மைப் பாடமாக எடுத்துப் பயின்று பட்டதாரிகளாக உருவாகி இருக்கின்றனர். இளங்கலை, முதுகலை, முனைவர் பட்டங்கள் வரையில் தமிழிலேயே படிப்பதற்கான சூழல் மலாயாப் பல்கலைக்கழகத்தில் இன்று உருவாகி இருக்கிறது. மேலும், மொழியியல் புலம் என்ற மற்றொரு துறையிலும் தமிழ் பயிற்றுவிக்கப்படும் நிலைமையும் ஏற்பட்டிருக்கிறது.

இவ்வாறு, பல தடைகளையும் போராட்டங்களையும் கடந்து வந்திருப்பதுதான் மலாயாப் பல்கலைக்கழக இந்திய ஆய்வியல் துறை. காலந்தோறும் அதற்கு நெருக்கடிகள் ஏற்பட்டு வந்திருந்தாலும், தமிழ் மக்களின் ஒற்றுமையும் உணர்வும்தாம் அரணாக இருந்து அத்துறையை மீட்டுத் தந்திருக்கிறது; உயிரோடும் உயிர்ப்போடும் காத்து வந்திருக்கிறது என்றால் மிகையில்லை.

அரைநூற்றாண்டுக் கால வரலாற்றைப் பெற்றிருக்கும் நமது இந்திய ஆய்வியல் துறை, இன்று பல நெருக்கடிகளுக்கு இடையில் தவித்துக் கொண்டிருக்கிறது! சிக்கல்களுக்கு நடுவில் மாட்டிக் கொண்டிருக்கிறது! இந்திய ஆய்வியல் துறை பறிபோகும் நிலைமை ஏற்பட்டிருக்கிறது!

அதனைக் காக்கவும் காப்பாற்றவும் திறனற்றவர்களா நாம்?
அதனைக் காக்கவும் காப்பாற்றவும் வழியற்றவர்களா நாம்?
அதனைக் காக்காவிட்டால் வரலாற்றுப் பழி ஆகாதா? பிழை ஆகாதா?
அதனைக் காப்பாற்றாவிட்டால் அடுத்தத் தலைமுறை நம்மைக் கேள்வி கேட்காதா? நமது முகத்தில் காறி உமிழாதா?

நமது முன்னோர்களின் வியர்வையிலும் செந்நீரிலும் உருவாக்கப்பட்ட.. உண்டியல் காசிலும் உழைத்தப் பணத்திலும் எழுப்பப்பட்ட.. ஒன்றுபட்ட உணர்வின் எழுச்சியிலும் மொழி – இன மான உணர்ச்சியிலும் நிறுவப்பட்ட.. நமது இதயங்களோடும் உணர்வுகளோடும் கலந்துவிட்ட.. இந்திய ஆய்வியல் துறை.. மிகக் குறைந்த ஆயுளோடு.. வரலாற்றுத் தடத்தின் ஈரம் காய்வதற்கு முன்பே.. நமது கண்முன்னாலேயே..

காணாமல் போகலாமா?

அப்படியே போனால்..!

பறிபோகப் போவது இந்திய ஆய்வியல் துறை மட்டுமல்ல!

ஒட்டுமொத்த மலேசியத் தமிழரின் மானமும்தான்!!

செய்தி:திருத்தமிழ்

வல்லினம் இதழ் ஏற்பாட்டில் "கலை இலக்கிய தினம்"

இடம்:
தான் ஸ்ரீ சோமா அரங்கம், துன் சம்பந்தன் கட்டிடம்

நாள்:

29 ஆகசுட் 2009 (சனிக்கிழமை)
நேரம்:
காலை 9.00 - இரவு 7.00

கட்டணம்:
ரிங்கிட் 50 மட்டும்

(ம. நவீன் கவிதைத் தொகுதி,
மஹாத்மன் சிறுகதைத் தொகுதி
&
பா.அ. சிவம் மொழிபெயர்ப்புக் கவிதைகள்
தொகுதிகளின் விலை இதில் அடக்கம்)


தொடர்புக்கு:016 - 3194522 (ம. நவீன்)

தாயின் மேல் ஆணை! தந்தை மேல் ஆணை!

தாயின் மேல் ஆணை! தந்தை மேல் ஆணை!
தமிழக மேல் ஆணை!
தூய என் தமிழ்மேல் ஆணையிட்டே நான்
தோழரே உரைக்கிறேன்.

நாயினும் கீழாய்ச் செந்தமிழ்
நலிவதை நான் கண்டும்,
ஓய்தல் இன்றி அவர்நலம் எண்ணி,
உழைத்திட நான் தவறேன்.

தமிழரின் மேன்மையை இகழ்ந்தவனை என்
தாய் தடுத் தாலும் விடேன்!
எமை நத்துவாயென எதிரிகள் கோடி
இட்டழைத் தாலும் தொடேன்.

"தமக்கொரு தீமை" என்று நற்றமிழர்
எனை அழைத்திடில் தாவி,
இமைப்பினில் ஓடித் தரக்கடவேன் நான்
இனிதாம் என் ஆவி!

மானமொன்றே நல் வாழ்வெனக் கொண்டு
வாழ்ந்த எம் மறவேந்தர்
பூனைகள் அல்லர்; அவர்வழி வந்தோர்
புலி நிகர் தமிழ் மாந்தர்.

ஆன என்தமிழ் ஆட்சியை நிறுவ
அல்லல்கள் வரின் ஏற்பேன்!
ஊனுடல் கேட்பினும் செந்தமிழ் நாட்டுக்
குவப்புடன் நான் சேர்ப்பேன்...
தமிழ் நெறி இதழ்

Tuesday, August 25, 2009

புலிகளுக்குச் சொந்தமான 10 சிறிய ரக வான

தமிழீழ விடுததலைப் புலிகள் அமைப்புக்குச் சொந்தமான பத்து சிறியரக வானூர்திகள் கிழக்கு ஆபிரிக்க நாடான எரித்திரியாவில் நிற்பதாகவும், இவை அந்த நாட்டு வானூர்தி நிலையத்திலேயே நிறுத்தப்பட்டிருப்பதாகவும்
கொழும்பில் இருந்து வெளிவரும் பிரபல சிங்கள நாளேடான 'லங்காதீப' செய்தி வெளியிட்டிருக்கின்றது.
இந்த வானூர்திகளைப் பயன்படுத்தியே வானூர்திப் பயிற்சிகளை எரித்திரிய வானூர்தி நிலையத் தரப்பு மேற்கொண்டுவருவதாகவும், இந்த வானூர்தி நிலையத்தை நிர்வகித்துவரும் நிறுவனம் விடுதலைப் புலிகள் அமைப்புடன் நெருக்கமான தொடர்புகளைக் கொண்டிருப்பதாகவும் இந்தச் செய்தியில் மேலும் தெரிவிக்கப்பட்டிருக்கின்றது.

மலேசியாவில் இருந்து அண்மையில் சிறிலங்கா புலனாய்வுத்துறையினரால் கொழும்புக்கு கடத்திச் செல்லப்பட்ட தமிழீழ விடுதலைப் புலிகள் அமைப்பின் செயலாளர் நயகம் செல்வராஜா பத்மநாதனை விசாரணைக்கு உட்படுத்தியபோது இந்தத் தகவல்கள் உறுதிப்படுத்தப்பட்டதாகவும் அந்தச் செய்தியில் மேலும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இது தொடர்பாக 'லங்காதீப' வெளியிட்டுள்ள செய்தியில் மேலும் முக்கியமாகத் தெரிவிக்கப்பட்டிருப்பதாவது:

"எரித்திரியாவுக்கும் விடுதலைப் புலிகள் அமைப்புக்கும் இடையிலான நெருங்கிய தொடர்புகள் பற்றிய தகவல்கள் கடந்த பல வருடங்களாகவே வெளியாகி வந்துள்ளன. இவ்வாறு எரித்திரியாவின் கடல் பகுதியில் புலிகள் அமைப்பின் கப்பல்கள் தரித்து நிற்பதாகவும், எரித்திரியாவில் உள்ள ஆயுதக் குழுக்களுக்கும் விடுதலைப் புலிகளுக்கும் இடையில் நெருங்கிய தொடர்புகள் இருந்துவருவதாகவும் கடந்த காலங்களில் செய்திகள் வெளியாகியிருந்தன.

இந்நிலையில் தற்போது பாதுகாப்புத்துறை வட்டாரங்களில் இருந்து வெளியாகியிருக்கும் தகவல்களின்படி புலிகளுக்குச் சொந்தமான 10 சிறியரக வானூர்திகள் எரித்திரியாவில் இருப்பதாகவும், இவை எரித்திரியாவின் வானூர்தி நிலையத்திலேயே இன்னும் நிறுத்தப்பட்டிருப்பதாகவும் தெரியவந்திருக்கின்றது.

இந்த வானூர்திகளைப் பயன்படுத்தியே வானூர்திப் பயிற்சிகளை எரித்திரிய வானூர்தி நிலையத் தரப்பு மேற்கொண்டுவருவதாகவும், எரித்திய நாட்டு வானூர்தி நிலையத்தை நிர்வகித்துவரும் வர்த்தக நிறுனம் புலிகள் இயக்கத்துடன் நெருங்கிய தொடர்புகளைக் கொண்டிருப்பதாகவும் மேலும் தகவல்கள் தெரிவிக்கின்றன.

இது தொடர்பாக பாதுகாப்புப் புலனாய்வுத்துறை மேற்கொண்ட விசாரணைகளில், எரித்திரிய வானூர்தி நிலையத்தில் நிறுத்திவைக்கப்பட்டுள்ள 10 வானூர்திகளும் முன்னர் வான்புலிகள் தமது தாக்குதல் நடவடிக்கைகளுக்குப் பயனபடுத்திய சிலின் - 143 ரகத்தைச் சேர்ந்த வானூர்திகளே என்பதும் இப்போது உறுதிப்படுத்தப்பட்டிருக்கின்றது.

இதன்படி எரித்திரிய வானூர்தி நிலையத்தை விடுதலைப் புலிகள் அமைப்பு சார்ந்த நிறுவனம் ஒன்றே நிர்வகித்து வருகின்றது என்ற செய்தி சிறிலங்கா பாதுகாப்புத் தரப்பினருக்கு மிகுந்த அச்சுறுத்தலைக் கொடுத்திருக்கின்றது.

இது தொடர்பான முழுமையான விசாரணைகளை சிறிலங்கா பாதுகாப்புத் தரப்பினர் எரித்திரிய பாதுகாப்புத் தரப்பினருடனும், அந்நாட்டின் வானூர்தி நிலைய அதிகாரிகளுடனும் மேற்கொள்ளவிருப்பதாகவும் தெரியவந்திருக்கின்றது.