;

பாடல்கள்

Friday, September 18, 2009

1மலேசியா வலைப்பதிவில் தமிழ்:- மாண்புமிகு பிரதமருக்கு நன்றிமடல்

மதிப்பிற்கும் மாண்பிற்கும் உரிய,
மலேசியப் பிரதமர் டத்தோஸ்ரீ நஜிப் துன் இரசாக் அவர்களே,

‘ஒரே மலேசியா’ என்ற உயரிய கோட்பாட்டினைப் பெருமையோடு மதித்துப் போற்றும் மலேசிய மக்களில் ஒருவனாக, மிகுந்த நெகிழ்ச்சியோடும் நன்றி உணர்ச்சியோடும் இந்த மடலை எழுதுகின்றேன்.

என்னுடைய மன நெகிழ்ச்சிக்கான காரணத்தை முதலில் தங்களுக்குச் சொல்லக் கடமைப்பட்டுள்ளேன்.

இன்று (16.9.2009), மலேசியா உருவாக்கம் பெற்ற 46ஆம் ஆண்டு வரலாற்று நாள். சபா, சரவா ஆகிய இரு மாநிலங்களும் இணைக்கப்பட்டு மலாயா என இருந்த நம் நாடு மலேசியாவாக உருப்பெற்ற வரலாற்றுச் சிறப்புமிக்க நாள். மலேசியர்கள் அனைவரும் பெருமையுடன் நினைத்துப்பார்க்க வேண்டிய ஒற்றுமைத் திருநாள்.

இதே நாளை, மலேசியாவின் இன்னுமொரு வரலாற்றுச் சிறப்புமிக்க நாளாகத்தான் நான் இப்போது பார்க்கிறேன்.

ஆம், டத்தோஸ்ரீ அவர்களே,
இன்றுதான், தங்களின் ஒரே மலேசியா வலைப்பதிவு முதன்முறையாக எங்கள் அழகுதமிழில் உலாவர தொடங்கியிருக்கிறது. ஒரே மலேசியா வலைப்பதிவில் ஓங்குபுகழ் தமிழுக்கும் அரியணை கிடைத்திருக்கிறது; ஆங்கிலம், மலாய், சீனம் ஆகிய மொழிகளில் மட்டுமே இயங்கிய ஒரே மலேசியா வலைப்பதிவு இன்றுதொடங்கி எங்கள் அன்னைமொழியாம் அழகார்ந்த செந்தமிழ் பேசுகிறது. அதைக்கண்டு, எங்கள் உள்ளமெல்லாம் சிலிர்க்கிறது; மகிழ்ச்சி.. மகிழ்ச்சி என ஆர்ப்பரிக்கிறது.

மாண்புமிகு டத்தோஸ்ரீ அவர்களே,
தாங்கள் அறிமுகப்படுத்திய ஒரே மலேசியா கொள்கையில் இதுவோர் முகமையான விடயமாகும். தொடக்கத்தில் ஒரே மலேசியா வலைப்பதிவில் தமிழ்மொழி இல்லாததைக் கண்டு மலேசியத் தமிழர்கள் கொஞ்சம் துணுக்குற்றுப் போயினர். இன்னும் சொல்லப்போனால், அதிர்ச்சியும் அடந்திருந்தனர்.

தமிழ் மக்களின் இந்த மனக்குறை தமிழ் நாளிகைகள், தமிழ் வலைப்பதிவுகள் முதலானவற்றின் வழியாக தங்கள் மேலான பார்வைக்கு முன்வைக்கப்பட்டது. இதற்கோர் நல்ல தீர்வைச் தாங்கள் கண்டிப்பாகச் செய்வீர்கள் என மிகவும் எதிர்பார்க்கப்பட்டது.

ஒரே மலேசியா வலைப்பதிவில் தமிழுக்கும் இடம்வேண்டும் என்கிற தமிழ் மக்களின் எதிர்பார்ப்பைப் புரிந்துகொண்டு இப்போது எங்கள் இன்னுயிர்த் தமிழையும் இணைத்துக் கொண்டிருப்பதைக் கண்டு மகிழ்வும் பெருமையும் எய்துகின்றோம்.

எங்களின் உணர்வுகளுக்கும் நம்பிக்கைக்கும் மதிப்பளிக்கும் வகையில் தாங்கள் செய்திருக்கும் இந்த மேன்மையான செயலைக் கண்டு, தங்களுக்கு இருகரம்கூப்பி நன்றி சொல்வதைக் கடமையாகவும் கட்டயமாகவும் கொள்கின்றோம்.

மலேசியப் பிரதமராகிய தங்களின் வலைப்பதிவில், நாட்டின் மற்றைய மொழிகளுக்கு இணையாக தமிழையும் இடம்பெறச் செய்திருப்பதை எங்கள் தமிழ்கூறு நல்லுலகம் ஒரு வரலாற்றுச் சாதனையாகவே பதிவுசெய்துகொள்ளும் என நம்புகிறேன்.

மாண்புமிகு டத்தோஸ்ரீ அவர்களே,
இனி, தங்களின் சீரிய சிந்தனைகளும் ஏற்றமிகு ஏடல்களும் எங்களுக்கு இனியத் தமிழ் வழியிலேயே கிடைக்கப்பெறும். அவற்றை ஆழந்து உணர்ந்துகொண்டு தங்களின் வழிகாட்டுதலில் செயல்படுவதற்கு அணியமாக இருக்கின்றோம் என்பதைத் தெரிவிக்க விழைகிறேன்.

இறுதியாக, தமிழ் மக்களின் உள்ளத்துக்கு மிக நெறுக்கத்தில் இருக்கும் தமிழுக்கு ஒரே மலேசியா வலைப்பதிவில் இடம்கொடுத்ததன் பயனாகத் தாங்கள் தமிழ் மக்களின் உள்ளங்களில் நீங்கா இடத்தைப் பிடித்திருக்கிறீர்கள் என்று சொன்னால் மிகையில்லை. இதுபோலவே, எங்கள் மக்கள் உள்ளங்களில் இன்னும் தேங்கிக்கிடக்கும் பல்வேறு குறைபாடுகளுக்கும் குழப்பங்களுக்கும் படிப்படியாகத் தீர்வுகளைக் கண்டு தமிழர்கள் வாழ்வில் நம்பிக்கை ஒளி ஏற்றிவைப்பீர்கள் என மனதார நம்புகிறேன். மீண்டும் நெஞ்சார்ந்த நன்றியினைச் சொல்லி விடைபெறுகிறேன்.

நன்றி, வணக்கம்.

அன்புடன்,
மலேசியத் தமிழர்கள் சார்பில்,
திருத்தமிழ் ஊழியன்,
சுப.நற்குணன்.

தொடர்பான செய்தி:-
1மலேசியா வலைப்பதிவு: மாண்புமிகு பிரதமருக்கு ஓர் அன்புமடல்.

பி.கு:- மாண்புமிகு பிரதமருக்கு நன்றி சொல்ல வேண்டியது தமிழர் அனைவருடைய கடமையாகும். உங்கள் நன்றியறிதலைத் தெரிவிக்க இங்கே சொடுக்கவும்.

ஒரே மலேசியா வலைப்பதிவைத் தமிழில் படிக்க

இங்கே சொடுக்கவும்

No comments: